மட்டக்களப்பு, தேற்றாத்தீவு ஸ்ரீ பாலமுருகன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின் போது, செவ்வாய்க்கிழமை (09) இடம்பெற்ற நிகழ்வில், ஒரு மாம்பழம் 2.5 இலட்சம் ரூபாவிற்கு ஏலத்தில் விற்பனையாகியுள்ளது.
வசந்த மண்டப பூஜை, உள், வெளி வீதி உலாக்கள் உட்பட விசேட ஆலய வழிபாடுகளைத் தொடர்ந்து, மாலை மாம்பழத் திருவிழா நடைபெற்றது.
முருகப் பெருமானும் விநாயகப் பெருமானும் மாம்பழத்திற்காக போட்டியிட்ட தெய்வீகச் செயலையும், ‘பெற்றோரே உலகம்’ என்ற செய்தியை வலியுறுத்தும் வகையிலும் இந்தத் திருவிழா நடைபெற்றது.
இந்த நிகழ்வின் போது, வழிபாடுகளுக்குப் பயன்படுத்தப்பட்ட மாம்பழம் ஏலத்தில் விடப்பட்டது.
இறுதியாக, இளையதம்பி தவகரன் என்பவரால் சுமார் 2.5 இலட்சம் ரூபாவிற்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது.
இது மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு மாம்பழத்திற்கு இதுவரை செலுத்தப்பட்ட அதிகூடிய தொகை என கூறப்படுகிறது.
