‘‘பிரதேச சபைகளிலிருந்து பாராளுமன்றம் வரையில் சகல மக்கள் பிரதிநிதிகளின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் வெலிகம பிரதேச சபையின் தலைவரை கொலை செய்ததை போன்று எங்களையும் கொன்றுவிட்டு எங்களுக்கும் ஏதாவது பட்டப்பெயரை சூட்டி விடலாம்’’ என்றும் சர்வசன அதிகாரத்தின் பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று (23) வியாழக்கிழமை நடைபெற்ற போதைப்பொருள் மற்றும் ஒழுங்க மைக்கப்படட குற்றங்களை ஒழிப்பதற்கான ஒரு தேசிய வேலைத்திட்டம் மற்றும் சட்டரீதியான கட்டமைப்பை வலுப்படுத்துதல் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
‘‘வெலிகம பிரதேச சபையின் தலைவர் கொலை செய்யப்பட்ட உடனேயே இங்கே உரையாற்றிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர், இந்த கொலையுடன் தொடர்புடைய வர்களை தேடுகின்றோம்.
அவர்களுக்கு தண்டனை வழங்குவோம், குறித்த கொலையை கண்டிக்கின்றோம் என்றெல்லாம் கூறவில்லை.
கொல்லப்பட்டவருக்கு லசா என்று பட்டப் பெயரொன்றை குறிப்பிட்டு, அவர் பாதாள குழுவை சேர்ந்தவர் என்று குறிப்பிடுகின்றார்.
யார் இது தொடர்பான வழக்கை விசாரித்தது. ஊர் வழக்கை அங்கேயே கேட்டு தண்டனை வழங்குவதையா செய்தீர்கள்.
மக்கள் யார் மீது நம்பிக்கை வைப்பர். மக்கள் பிரதிநிதிகளாக எங்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கின்றது.
எங்கள் நெஞ்சுக்கும் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு திலித் ஜயவீர எனும் ரொட்டியா என்று பட்டப்பெயரையும் சூட்டலாம்.
இதனால் இது சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடிய விடயமா? இது தொடர்பில் நான் கவலையடை கின்றேன்.
நீதிமன்றம், பாதுகாப்புத் தரப்பினரை சவாலுக்குட்படுத்தும் வகையில் இங்கே அமைச்சர் கூறியுள்ளார்.
இதேவேளை, பிரதேச சபைகள் முதல் பாராளுமன்றத்தில் இருக்கும் மக்கள் பிரதிநிதிகள் வரையில் அனைவருக்கும் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள்.
இவ்வாறான நிலைமையில் எங்களுக்கு செல்ல முடியாது’’ என்றார்.
