அரச வங்கி ஒன்றில் போலி நகையை அடகு வைக்க சென்ற சந்தேக நபரை கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கல்முனை மாநகர சபைக்கு உட்பட்ட குறித்த அரச வங்கி நிர்வாகத்திடமமிருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமைய இக்கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
போலி நகையை வங்கிக்கு அடகு வைப்பதற்காக வருகை தந்த நபரின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த வங்கியின் ஊழியர் முகாமையாளருக்கு அறிவித்துள்ளார்.
இந்நிலையில் உடனடியாக செயற்பட்ட வங்கி முகாமையாளர் கல்முனை தலைமையக பொலிஸாருக்கு அறிவித்ததுடன் சந்தேக நபரையும் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
கைதான சந்தேக நபர் குறித்த போலி நகையை கடற்கரை பகுதியில் கண்டெடுத்ததாகவும் கல்முனை நகர பகுதியில் உள்ள நகைக்கடையில் பெற்றுக்கொண்டதாகவும் முரண்பாடான தகவல்களை பொலிஸாரின் ஆரம்பக் கட்ட விசாரணையின் போது வாக்குமூலமாக வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சுமார் 49 வயதுடைய குறித்த சந்தேக நபரை கல்முனை நீதிவான் நீதிமன்றில் வியாழக்கிழமை(20) முன்னிலை படுத்திய போது பிணையில் விடுதலை செய்யப்பட்டடுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸார் வழிகாட்டலில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.ஏ.எல்.லசந்த களுஆராச்சி தலைமையிலான பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
-பாறுக் ஷிஹான்
