டிக்வா புயல் ஓய்ந்த பின்னரும் பல்வேறு பிரச்சினைகளை கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பல்வேறு பகுதிகள் எதிர்கொண்டுள்ளன.
அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் திண்மக்கழிவுகள் தேங்கி துர்நாற்றம் வீசுவதுடன் இக்குப்பைகள் சுழற்சி முறையில் படிப்படியாக அகற்றப்பட்டு வருகின்றன.
அத்துடன் டிக்வா புயல்காரணமாக கரையை நோக்கி இழுத் பாதுகாப்பாக வைக்கப்பட்ட படகுகள் தோணிகள் என்பன இன்னும் பொதுமக்கள் பயணம் செய்யும் பாதைகளை ஆக்கிரமித்துள்ளன.
இவ்வாறு ஆக்கிரமித்துள்ள படகு தோணி உரிமையாளர்கள் படிப்படியாக குறித்த படகுகள் தோணிகளை அகற்றி வருகின்றனர்.
எனினும் அப்பகுதியில் இடம்பெறும் மண் அரிப்பின் காரணமாக பாதுகாப்பின் நிமிர்த்தம் மீண்டும் தங்கள் படகு தோணிகளை பிரதான பாதைகளின் இரு மருங்கிலும் வைத்து வருகின்றனர்.
இவை தவிர பெரிய நீலாவணை முதல் சாய்ந்தமருது வரை கடற்கரை ஓர வீதி பகுதியில் எவ்வித அனுமதி இன்றியும் பொதுப் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சில மீனவர்கள் செயற்பட்டு வருகின்றனர்.
பிரதான சந்திகள் மற்றும் மக்கள் செல்கின்ற பாதைகளை ஆக்கிரமித்து மோட்டார் வாகனம் திருத்துமிடம் மீன் விற்பனை நிலையங்களை அமைத்துள்ளனர்.
இதனால் அப்பகுதியில் பொதுப்போக்குவரத்து தடை படுவதுடன் அண்மைக்காலமாக விபத்துக்களும் ஏற்பட்டு வருகின்றன.
இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்ச்சியாக இப்பகுதிகளில் எவ்வித அனுமதி இன்றி மேற்கொள்வதனால் பொதுப்போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டு வருவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
எனவே பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் இவ்விடயத்தில் உரிய நடவடிக்கை மேற்கொண்டு தற்காலிகமாக நிர்மாணிக்கப்பட்டுள்ள மீன் விற்பனை நிலையங்கள் உள்ளிட்ட சட்டவிரோத நிர்மாணங்களை அகற்ற முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
-அம்பாறை நிருபர் பாறுக் ஷிஹான்
