முன்னாள் பிரதியமைச்சர சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் ஒரு பொலிஸ் அதிகாரியின் கொலை உட்பட ஐந்து கொலைகளில் தொடர்புடையவரா என்பது குறித்து விசாரித்து வருவதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவங்கள் குறித்து பல குழுக்கள் மூலம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறது.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவிநாத் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறையினர் மேற்கொண்ட விசாரணைகளின் போதே கஇந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் காணாமல் போனது தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறையின் பல சிறப்புக் குழுக்கள் மட்டக்களப்பு பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அந்த விசாரணைகள் தொடர்பில், சந்தேக நபர்கள் முகாம்களை நடத்திய இடங்களைக் கண்காணித்து, பலரிடம் வாக்குமூலங்களைப் பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் சமீபத்தில் கைது செய்யப்பட்டு, தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் குற்றப் புலனாய்வுப் பிரிவின் தடுப்பில் உள்ளார்.