பாலஸ்தீனம் மேற்கு கரை, காசா முனை என 2 பகுதிகளாக உள்ளது.
இதில் காசா முனை ஹமாஸ் ஆயுதக்குழுவினரும், மேற்கு கரையை முகமது அப்பாஸ் தலைமையிலான பாலஸ்தீன அரசும் நிர்வகித்து வருகின்றனர்.
கடந்த 2023-ம் ஆண்டில் ஹமாஸ் இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர்.
இதைத்தொடர்ந்து காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் மீது போர் அறிவித்த இஸ்ரேல் 2 ஆண்டாக தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்தப் போரில் 65 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்.
அதேவேளை, பாலஸ்தீனத்தை தனிநாடாக 140-க்கும் மேற்பட்ட நாடுகள் அங்கீகரித்துள்ளன.
இஸ்ரேல், அமெரிக்கா போன்ற நாடுகள் பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கவில்லை.
இதற்கிடையே, பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன.
இந்நிலையில், பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக பிரான்ஸ் நாடும் அறிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு கூட்டத்தில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் இதனை அறிவித்தார்.
உலக நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதற்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கண்டனம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.