அரசியல்உள்நாடு

பாராளுமன்ற பணியாளர்களின் கோரிக்கைக்கு அமைய உணவுக்காக அறவிடப்படும் விலை மீண்டும் மறுசீரமைக்கப்பட்டது

நுவரெலியாவில் அமைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான விடுமுறை பங்களாவில் ஒரு பகுதியை பாராளுமன்ற பணியாளர்கள் முன்பதிவு செய்வதற்கும் எதிர்காலத்தில் வாய்ப்பு

பாராளுமன்ற உறுப்பினர்களின் மாதிவெல வீட்டுத் தொகுதியின் புனரமைப்புக் குறித்தும் கலந்துரையாடல்

பாராளுமன்றப் பணியாளர்களின் கோரிக்கைக்கு அமைய பணியாளர்களின் உணவுக்காக அறவிடப்படும் விலையை மறுசீரமைப்பதற்கு கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் அண்மையில் (20) கூடிய பாராளுமன்ற சபைக் குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் 2025.05.23ஆம் திகதி கூடிய பாராளுமன்ற சபைக்குழுவில் பாராளுமன்ற பணியாளர்களிடம் உணவுக்காக அறவிடப்படும் தொகையை 2025.06.01 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் நிறைவேற்றுத் தரப் பணியாளர்களுக்கு 4000 ரூபாவாகவும், நிறைவேற்றும்தரம் அல்லாத பணியாளர்களுக்கு 2500 ரூபாவாகவும் திருத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இருந்தபோதும், உணவுக்காக அறவிடப்படும் விலையை மறுசீரமைக்குமாறு பாராளுமன்றப் பணியாளர்களினால் கோரிக்கை விடுப்பட்டது.

இதனைக் கருத்தில் கொண்டு அண்மையில் கூடிய பாராளுமன்ற சபைக்குழுக் கூட்டத்தில், நிறைவேற்றுத் தர பணியாளர்களிடம் 3000 ரூபாவையும், நிறைவேற்றும் தரம் அல்லாத பணியாளர்களிடம் 2000 ரூபாவையும் அறவிடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த தீர்மானத்திற்கு அமைய புதிய விலை மறுசீரமைப்பு 2025.07.01ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருகின்றது.

அத்துடன், 2025.05.03ஆம் திகதி குறித்த குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய பொதுமக்களுக்கான உணவுக்கூடத்தில் உணவைப் பெற்றுக் கொள்ளும் பாாளுமன்ற உறுப்பினர்களின் சாரதிகள், பொலிஸ் அதிகாரிகள், ஜனாதிபதி மற்றும் பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் ஊடகவியலாளர்களிடம் அறவிடப்படும் தொகையில் மாற்றம் செய்யாதிருப்பதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.

மேலும், நுவரெலியாவில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான விடுமுறை பங்களாவின் ஒரு பகுதியை பாராளுமன்றப் பணியாளர்களுக்கு ஒதுக்குவது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

இதுவரை, கௌரவ பாராளுமன்ற உறுப்பினரகளுக்கு மாத்திரமே இங்கு முன்பதிவுகளை மேற்கொண்டு ஒதுக்கீடுகளைச் செய்யும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

இவ்வாறான நிலையில் கௌரவ சபாநாயகரின் அறிவுறுத்தலின்படி, எதிர்காலத்தில் இந்தக் கட்டிடத்தின் ஒரு பகுதி பாராளுமன்றப் பணியாளர்களும் முன்பதிவை மேற்கொண்டு ஒதுக்கீட்டைச் செய்வதற்கான வாய்ப்புக் கிடைக்கவுள்ளது.

மேலும், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களின் மாதிவெல வீட்டுத்தொகுதி வளாகத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய புனரமைப்புப் பணிகள் குறித்தும், பாராளுமன்ற அமர்வு நாட்களில் வரும் பாராளுமன்ற உறுப்பினர்களின் சாரதிகள் பகலில் தற்காலிகமாகத் தங்குவதற்கு ஒரு இடத்தை ஒதுக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

பாராளுமன்ற சபைக் குழுவில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

Related posts

ஜோன்ஸ்டனுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் வழக்கு

இலஞ்சம் பெற்ற போலீஸ் உத்தியோகத்தர்கள் இருவர் கைது

புகையிரதத்தில் தொங்கிய நிலையில் பயணம் செய்த சீன யுவதிக்கு இலங்கையில் நேர்ந்த சோகம்

editor