அரசியல்உள்நாடு

பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பில் வெளியான தகவல்

தமக்குப் பாதுகாப்புத் தேவை எனக் கோரும் பாராளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகளை தேசிய பாதுகாப்பு சபையின் பரிசீலனைக்கு அனுப்ப நடவடிக்கை எடுப்பதாக பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார்.

பாதுகாப்பு தொடர்பான இறுதி மதிப்பீடு அறிக்கை தற்பொழுது கிடைத்துள்ள உறுப்பினர்களுக்குத் தேவையான பாதுகாப்பை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பதில் பொலிஸமா அதிபர் மேலும் தெரிவித்தார்.

கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் பதில் பொலிஸ்மா அதிபர் மற்றும் அமைச்சர்கள் பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளின் பங்குபற்றலில் 2025.05.23 ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே பதில் பொலிஸமா அதிபர் இதனைத் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பில் எதிர்த்தரப்பு கட்சித் தலைவர்கள் சிலர் 2025.05.20 ஆம் திகதி கௌரவ சபாநாயகரைச் சந்தித்து தமது பாதுகாப்புத் தொடர்பான சிக்கலைகளை முன்வைப்பதற்கு கலந்துரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்து தருமாறு விடுத்த கோரிக்கைக்கு அமைய, அன்றைய தினமே கௌரவ பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபாலவுடன் கௌரவ சபாநாயகர் மேற்கொண்ட கலந்துரையாடலை அடுத்து இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது.

அதற்கமைய, இங்கு கருத்துத் தெரிவித்த கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன, பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பான மதிப்பீட்டு அறிக்கைகளின் முன்னேற்றத்தை தனக்கு அறிவிக்குமாறு பதில் பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தினார்.

நாட்டில் காணப்படும் பாதுகாப்பு நிலைமை தொடர்பில் அறிவுறுத்திய பொலிஸ்மா அதிபர், அண்மைக்காலமாக இடம்பெற்ற பல மனிதப்படுகொலைகள் குற்றக் கும்பல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கிடையில் இடம்பெறும் மோதல்களின் விளைவுகள் எனவும், அந்தக் குற்றச் செயல்களுக்கு பிரதேச அரசியல்வாதிகளின் தொடர்புள்ளதாக கண்டறியப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டினார்.

இங்கு எதிர்த்தரப்பு கட்சித் தலைவர்களினால் தமது தரப்புப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பை பெறுவது தொடர்பில் ஏற்பட்டுள்ள தேவை தொடர்பில் விடயங்கள் முன்வைக்கப்பட்டன. அதற்கமைய, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) இராமநாதன் அர்ச்சுனா கருத்துத் தெரிவிக்கையில், தனக்குத் தேவையான பாதுகாப்பை வழங்குவதற்கு வசதிகள் இல்லையெனில், தனக்கான பாதுகாப்பை செய்துகொள்வதற்கு துப்பாக்கி வழங்குமாறு முன்மொழிந்தார்.

இங்கு கருத்துத் தெரிவித்த கௌரவ எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, உயர்ந்த ஜனநாயகப் பண்புகளைக் கொண்ட நாடொன்றில் பாதுகாப்புக்காக துப்பாக்கிகள் வழங்கப்படக்கூடாது எனவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளினால் ஒவ்வொரு நபர்களினதும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

அத்துடன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க குறிப்பிடுகையில், புதிய உறுப்பினர்கள் போதைப்பொருளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதால் அவர்களின் உயிர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்பதால் அந்த உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது பொருத்தமானது எனக் குறிப்பிட்டார்.

மேலும், கௌரவ எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க ஆகியோர் குறிப்பிடுகையில், தமது கட்சிகளில் குற்றச்செயல்களுடன் தொடர்புபட்ட அரசியல்வாதிகள் இருந்தால் அவர்களது தகவல்களை முன்வைக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

அத்துடன், பாதுகாப்பு மதிப்பீட்டு அறிக்கைகளை பெற்றுக்கொள்ளும் வரை, முழுமையான பாதுகாப்பை அகற்றாமல், பாதுகாப்பு தேவை எனக் கூறும் உறுப்பினர்களுக்கு பாதுகாப்பை வழங்குவது பொருத்தமாகும் எனவும் மதிப்பீடு அறிக்கை கிடைத்தவுடன் அதன் பரிந்துரைகளுக்கு அமைய நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திர குமார் பொன்னம்பலம் மற்றும் திலித் ஜயவீர ஆகியோர் தெரிவித்தனர்.

இந்தக் கூட்டத்தில் கௌரவ எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, கௌரவ எதிர்கட்சியின் முதற்கோலாசான் கயந்த கருணாதிலக்க ஆகியோரும் எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்கள், பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய, அமைச்சர்கள் பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர் மற்றும் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Related posts

கிஹான் பிலபிட்டிய மீதான விசாரணை அறிக்கையை ஆராய 5 பேர் கொண்ட குழு நியமனம்

 பாடசாலை மாணவியை கடத்த முயற்சி!- யாழில் பதற்றம்

சஜித் – அநுரவின் கல்வித் தகைமையை வெளிப்படுத்துமாறு கோரிக்கை!