குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வரும் விசாரணைகளின் அடிப்படையில் நான்கு மக்கள் பிரதிநிதிகள் பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்பில் உள்ளமை தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
குறித்த நான்கு பேர் தொடர்பிலும் தற்போது விசேட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இவர்கள் பயணம் மேற்கொள்ளும் இடங்கள், பழகும் நபர்கள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
பொதுமக்களைப் பாதுகாக்க அரசாங்கம் கடமைப்பட்டுள்ளது.
குற்றச் செயல்களுடன் தொடர்புடைய மக்கள் பிரதிநிதிகளுக்குப் பாதுகாப்பை வழங்க பொதுமக்கள் நிதியைப் பயன்படுத்துவதில் சிக்கல் நிலை காணப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரதேச சபைகளுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள சில மக்கள் பிரதிநிதிகளும் பாதாள உலகக் குழுக்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களா என்பது தொடர்பில் ஆராய்வதிலும் அரசாங்கம் அவதானம் செலுத்தியிருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலையைத் தொடர்ந்து மக்கள் பிரதிநிதிகள் மற்றும் குற்றங்களுடன் அவர்களுக்குரிய தொடர்புகள் குறித்து உருவான சமூக கருத்துக்களுக்கு மத்தியில் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
