முழங்காலுக்குக் கீழ் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளியான 12 வயதுச் சிறுவன் தலைமன்னாரிலிருந்து தமிழ்நாட்டின் தனுஷ்கோடி வரையிலான பாக்கு நீரிணையை, கடந்த வெள்ளிக்கிழமை 9 மணி 11 நிமிடத்தில் நீந்திக் கடந்து சாதனைபுரிந்துள்ளார்.
இயலாமைக்கும் சாதனைக்கும் உள்ள தூரத்தை நீந்தி கடந்துச்சென்று சாதனை படைக்க வேண்டும் என்ற இலட்சியத்துடன், சிறுவன் எடுத்த முயற்சி வெற்றியை கொடுத்துள்ளது.
சென்னை முகப்பேர் மேற்கு பகுதியைச் சேர்ந்த் 12 வயதான புவி ஆற்றல் என்ற சிறுவனே இச்சாதனை படைத்துள்ளார்.
முழங்காலுக்கு கீழே பாதிக்கப்பட்ட குறித்த மாற்றுத்திறனாளியான சிறுவன் கடந்த 2022ஆம் ஆண்டு சென்னை – செனாய் நகரில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு ஆணையகத்தின் வழிகாட்டுதலோடு தன்னுடைய நீச்சல் பயற்சியை தொடங்கினார்.
2024 ஆண்டு கோவாவில் நடைபெற்ற தேசிய நீச்சல் போட்டிகளில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்றுள்ளார்.
அந்தவகையில் தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கு நீந்தி கடப்பதற்காக இந்திய – இலங்கை இரு நாட்டு அரசிடம் அனுமதி கோரி விண்ணப்பித்திருந்தார்.
அதற்கு அனுமதி கிடைத்த நிலையில், நீந்துவதற்கு தடையல்ல என்பதை வலியுறுத்துவதற்காக இலங்கை – தலைமன்னாரில் இருந்து இந்தியாவில் தனுஷ்கோடி வரையிலான பாக்கு நீரிணை கடலை நீந்தி கடப்பதற்காக, சிறுவன் புவி ஆற்றல் ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து வெள்ளிக்கிழமை (03) மதியம் ஒரு விசைப்படகு மற்றும் நாட்டுப் படகில் மற்றும் அவரது பெற்றோர், பயிற்சியாளர், வைத்தியர் மற்றும் மீனவர்கள் உள்ளிட்ட 20 பேர் கொண்ட குழுவினருடன் தலைமன்னாரை வந்தடைந்துள்ளனர்.
-ருத்ரா