ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் விடுதிக்கு சேதம் ஏற்படுத்திய பத்து மாணவர்களிடமிருந்து நிர்வாகம் தேவையற்ற விதத்தில் பணம் அறவிட்டுள்ளமை அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் (கோப் குழுவில்) தெரியவந்தது.
அவ்வாறு சேதமடைந்த பல்கலைக்கழக சொத்துக்களின் பெறுமதியில் மூன்று மடங்கை சட்டரீதியாக அறிவிட்டு, இதற்கு மேலதிகமாக 25% வசூலிக்கப்பட்டிருப்பதாகவும் குழு சுட்டிக்காட்டியது.
கணக்கீடுகளில் அடிப்படையில் அறவிடப்பட்ட தொகையில் ஏதேனும் பிழைகள் இருந்தால் அதனைச் சரிசெய்யத் தயாராக இருப்பதாகப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் குழுவிடம் தெரிவித்தார்.
இதற்கமைய, மோதலுடன் சம்பந்தப்பட்ட இரண்டு தரப்பில் ஒரு தரப்பு மாணவர்களிடம் மாத்திரம் இவ்வாறு தண்டப்பணம் அறவிடப்பட்டிருப்பது எந்தளவுக்கு நியாயமானது என்பதை மறுபரிசீலனை செய்யுமாறும் கோப் குழுவில் தலைவர் அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டார்.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் தொடர்பான 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் அதன் தற்போதைய செயலாற்றுகை குறித்து ஆராயும் நோக்கில் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நிஷாந்த சமரவீர தலைமையில் அண்மையில் (20) கூடியபோதே இந்த விடயம் குறித்து ஆராயப்பட்டது.
பணியாளர்களின் கட்டமைப்பு, பல்கலைக்கழகத்தின் நிதி நிலைமை, கட்டுமானத் துறையில் தற்போதைய மற்றும் கடந்த கால நிலைமைகள், மாணவர்களுக்கும் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கும் இடையிலான உறவை மாணவர்களுக்கு சாதகமான மட்டத்தில் பராமரிக்க வேண்டியதன் அவசியம் உள்ளிட்ட விடயங்கள் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
இதற்கு அமைய, பல்கலைக்கழகத்தில் முழுநேர பதவியான பிரதான கணக்காளர் பதவியில் பணியாற்றுபவர் ஒரு தனியார் நிறுவனத்தின் நிர்வாகத் தரமற்ற பணிப்பாளராகப் பணியாற்றுவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதும் இங்கு தெரியவந்தது.
இந்தக் கணக்காளர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் ஒரு திட்டத்தில் பணிபுரிய விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் பதிவாளர் தெரிவித்தார். முழுநேரப் பதவியில் பணியாற்றும் ஒருவரை அமைச்சுடன் கலந்துரையாடாமல் வேறிடத்தில் பணியாற்றுவதற்கு அனுமதித்தமை சிக்கலுக்குரியது என்றும் குழுவின் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.
பல்கலைக்கழகப் பணிகளுக்கு எந்த இடையூறும் ஏற்படாத வகையில் பணியாற்ற பிரதான கணக்காளர் விடுவிக்கப்பட்டதாகப் பதிவாளர் தெரிவித்தார். இருப்பினும், பிரதான கணக்காளர் எடுத்த விடுமுறைகள் தொடர்பில் குழுவின் குழுவுக்குத் தெரியப்படுத்தினார்.
2024 ஆம் ஆண்டில் 44 நாட்கள் வேலைக்கு வருகை தந்த நேரம் மற்றும் வெளியேறி நேரம் குறித்த பதிவுகள் இல்லாமையால் அவற்றைச் சரிசெய்யுமாறு பதிவாளரிடம் விடுத்த கோரிக்யை அங்கீகரித்திருப்பதாகவும் இங்கு தெரியவந்தது.
மேலும், முறையான ஆட்சேர்ப்பு நடைமுறைக்கு அப்பால், பொது விளம்பரம் அல்லது விண்ணப்பங்கள் கோராமல் திட்ட முகாமையாளர் பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்தமை குறித்தும் குழு விரிவாகக் கலந்துரையாடியது.
அதன்படி, புதிய பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதில் உள்ள சிக்கல் நிறைந்த சூழ்நிலைகளை ஆராய்ந்து அறிக்கை தயாரிக்குமாறு குழுவின் தலைவர் அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.
பல்கலைக்கழக கணக்குகளில் வைப்புச்செய்யப்பட்ட தொகை குறித்தும் குழு விரிவாகக் கலந்துரையாடியது. அதன்படி, 2024 வெளிவாரிப் பிரிவுக்கான பட்டமளிப்பு விழாவிற்காக ஒரு மாணவரிடமிருந்து ரூ. 10,500/- வசூலிக்கப்பட்டதாகவும், ஆனால் பட்டமளிப்பு விழாவிற்குப் பின்னர் ரூ. 5.3 மில்லியனுக்கும் அதிகமான தொகை எஞ்சியுள்ளமை குறித்தும் குழு அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டுவந்தனர்.
அதன்படி, மாணவர்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் இந்தக் கட்டணத்தை முடிவு செய்யுமாறும் குழு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியது. இருப்பினும், இந்த ஆண்டு முதல் பட்டமளிப்பு விழாக்களுக்கு வசூலிக்கப்படும் தொகையைக் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் குழுவிடம் தெரிவித்தது.
அத்துடன், பல்கலைக்கழக கட்டடங்கள் மற்றும் கட்டுமானங்களில் நிலவும் பிரச்சினைக்குரிய நிலைமைகள் குறித்தும் குழுவில் கலந்துரையாடப்பட்டது.
இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி தயாசிறி ஜயசேகர, சட்டத்தரணி நிலாந்தி கோட்டஹச்சி, ருவன் மாபலகம, அசித நிரோஷன எகொட விதான, திலின சமரகோன், சந்திம ஹெட்டியாராச்சி, லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோர் கலந்துகொண்டனர்.