கெஹெல்பத்தர பத்மேவால் நாட்டினுள் நடத்திச் செல்லப்பட்டதாக கூறப்படும் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி நிலையத்தில் இரண்டு பாகிஸ்தானியர்கள் பணியாற்றி வந்துள்ளமை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நடத்திய விசாரணையின் போது, நுவரெலியா பகுதியில் கெஹெல்பத்தர பத்மே நடத்தும் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி நிலையம் பற்றிய தகவல்கள் வெளியாகின.
இன்று (04) காலை புதிய கறுவாதோட்டம் பொலிஸ் நிலையக் கட்டிடத்தைத் திறந்து வைக்கும் நிகழ்வில் பங்கேற்ற பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, சர்ச்சைக்குரிய ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி நிலையம் தொடர்பான மேலும் சில தகவல்களை வெளிப்படுத்தினார்.
“இந்த நாட்டில் நீண்ட காலமாக ஒரு குற்றக் கலாச்சாரம் உருவாகி வந்துள்ளது.
அந்த கலாச்சாரத்திற்குள் உருவாக்கப்பட்ட செயல்பாடுகள் சமீபத்தில் கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களின் உறுப்பினர்களால் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நாட்டில் ஒரு ஐஸ் போதைப்பொருள் தொழிற்சாலையை நடத்துவதற்காக பாகிஸ்தானிய பிரஜைகள் அழைத்து வரப்பட்டுள்ளனர் என்ற தகவலும் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினர்கள், அரசியல்வாதிகள் அவர்களை எவ்வாறு வளர்த்தார்கள், அவர்களுடன் உறவுகளைப் பேணி, அவர்களுக்கான தேவைகளை எவ்வாறு பூர்த்தி செய்து கொண்டார்கள் என்பது குறித்து சில தகவல்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.
எதிர்காலத்தில் ஆழமான மற்றும் முழுமையான விசாரணைகள் மூலம் இந்தத் தகவல் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதால், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இந்த விசாரணைகளை ஆழமாக நடத்தி வருகிறது.” என்றார்.
இதற்கிடையில், கெஹல்பத்தர பத்மே குறித்த ஐஸ் போதைப்பொருள் தொழிற்சாலைக்காக 4 மில்லியன் ரூபாய்க்கு மேல் செலவிட்டுள்ளதாகவும், அதற்காக நுவரெலியா பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நோக்கத்திற்கு தேவையான சுமார் 2,000 கிலோகிராம் இரசாயனங்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.