ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நிறைவடைந்த போதிலும், தபால் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு தொடரும் என்று தபால் தொழிற்சங்கங்கள் இன்று (19) பிற்பகல் அறிவித்துள்ளன.
ஜனாதிபதியின் பொதுமக்கள் தொடர்பு பணிப்பாளர் நாயகம் தர்மசிறி கமகேவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலுக்குப் பிறகு, தபால் தொழிற்சங்கங்கள் ஊடகங்களுக்கு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளன.
19 கோரிக்கைகளை முன்வைத்து, தபால் தொழிற்சங்கங்கள் நேற்று (18) பிற்பகல் முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளன.
இதன் காரணமாக, நாடு முழுவதும் உள்ள அனைத்து தபால் நிலையங்களின் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த விடயம் தொடர்பில், தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கத்தின் தலைவர், இ.ஜி.சி. நிரோஷன் தெரிவிக்கையில்,
உடனடியாக அமைச்சருடன் ஒரு கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
அந்த கலந்துரையாடலுக்குப் பிறகு, தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் பணிப்புறக்கணிப்பை முடிவுக்குக் கொண்டுவர நாங்கள் தயாராக உள்ளோம்.
அதுவரை தொடர்ச்சியாக இந்த பணிப்புறக்கணிப்பை தொடருவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவித்தார்.