அரச ஊழியர்கள் பழைய பழக்கவழக்கங்களைக் கைவிட்டு புதிய பழக்கவழக்கங்களைத் தழுவ வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவும், அவ்வாறு மாறாவிட்டால், தனது அரசாங்கம் மாற்றங்களைச் செய்யத் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
இன்று (05) முற்பகல் கேகாலையில் நடைபெற்ற உலக சுற்றாடல் தின நிகழ்வில் பங்கேற்ற போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
“பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்போம்” முக்கிய கருப்பொருளை முதன்மைப்படுத்தி “முளைப்பதற்கு இடமளிப்போம்” என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இம்முறை உலக சுற்றாடல் தினத்தில் பல சாதகமான நடவடிக்கைகளை எடுக்க முடிந்ததில் மகிழ்ச்சி அடைவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில், பந்துல பெத்தியாவின் வாழ்விடமானது சரணாலயமாக அறிவிக்கப்படல், நில்கல உள்ளிட்ட புதிய வனப்பகுதிகள் குறித்த நான்கு வர்த்தமானிகளை வெளியிடல், சூழல் நேய மாதிரிப் பாடசாலைகள் மற்றும் பசுமைப் புகையிரத நிலையங்களை பாராட்டல் என்பன இடம்பெற்றன.
பொதுவான தேசிய உணர்வின் மூலம் பூமியில் அமைதியைக் கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு நமது தலைமுறைக்கு உள்ளது என்பதையும், தேசிய ஒற்றுமையை உருவாக்க சுற்றாடலைப் பயன்படுத்த முடியும் என்பதையும் நான் இங்கு விளக்கினேன்.
நமது நாட்டின் அழகிய சுற்றுச்சூழல் அமைப்பை அழித்த துயரத்திற்கு, இந்த நாட்டின் அரசியல் அதிகாரத்தின் செயல்கள் காரணமாக அமைந்தன என்றும், அந்த சகாப்தத்தை நாம் முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டோம் என்றும், அதன்படி, தற்போது அதிகாரிகள் மாற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.
சுற்றாடலை மீட்டெடுத்து எதிர்கால சந்ததியினருக்கு வழங்குவதற்கான பிரஜைகளின் பொறுப்பையும் இதன்போது ஜனாதிபதி நினைவு கூர்ந்தார்.