நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில், நுவரெலியா மாவட்டத்திற்கான உள்ளூராட்சி சபைகளுக்கு தெரிவாகியுள்ள உறுப்பினர்களுடான கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.
நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இ.தொ.கா பொதுச் செயலளாருமான ஜீவன் தொண்டமான் தலைமையிலும், தவிசாளரும் நிதிச்செயலாளருமான மருதப்பாண்டி ராமேஸ்வரன் அவர்களின் பங்கேற்புடனும் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலானது கொட்டகலை சி.எல்.எப் வளாகத்தில் நேற்று(02) இடம்பெற்றிருந்தது.
இதன் போது பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பில் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களுடன் விரிவாக கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக முதன் முறையாக உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிட்டு உள்ளூராட்சி சபைகளுக்கு தெரிவாகியுள்ள உறுப்பினர்களுடன் கட்சியுடனான கோட்பாடு மற்றும் அனுகுமுறைகள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இம்முறை நடந்து முடிந்த 2025 உள்ளூராட்சி சபைத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் சேவல் சின்னத்தில் தனித்து போட்டியிட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 39 உறுப்பினர் எண்ணிக்கையை பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதில் நோர்வூட் பிரதேச சபையில் 06 உறுப்பினர்கள், கொட்டகலை பிரதேச சபையில் 05 உறுப்பினர்கள், அக்கரபத்தனை பிரதேச சபையில் 04 உறுப்பினர்கள், ஹட்டன்-டிக்கோயா நகர சபையில் 02 உறுப்பினர்கள், அம்பகமுவ பிரதேச சபையில் 02 உறுப்பினர்கள், தலவாக்கலை-லிந்துலை நகர சபையில் 02 உறுப்பினர்கள், நுவரெலியா பிரதேச சபையில் 06 உறுப்பினர்கள், நுவரெலியா மாநகர சபையில் 02 உறுப்பினர்கள், கொத்மலை பிரதேச சபையில் 08 உறுப்பினர்கள், ஹங்குரான்கெத்த பிரதேச சபையில் 02 உறுப்பினர்கள் என மொத்தமாக 39 உறுப்பினர்களை பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். வலப்பனை பிரதேச சபையில் நாட்காளி சின்னத்தில் போட்டியிட்டு 02 உறுப்பினர்களையும் பெற்றுக்கொண்டுள்ளது.
விசேடமாக இவர்களில் 32 ஆண் உறுப்பினர்களும், 09 பெண் உறுப்பினர்களும் இதில் உள்ளடங்குகின்றார்கள்.
மேலும் மஸ்கெலியா பிரதேச பிரதேச சபைக்கான வேட்புமனு நிராகரிக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்த 39 ஆசனங்களை பெற்றுக்கொண்டுள்ளது. மஸ்கெலியா பிரதேச சபைக்கான வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்குமாயின் உறுப்பினர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்பட்டிருக்கும்.
நடைபெற்ற குறித்த கலந்துரையாடலில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இ.தொ.கா பொதுச் செயலளாருமான ஜீவன் தொண்டமான், தவிசாளரும் நிதிச்செயலாளருமான மருதப்பாண்டி ராமேஸ்வரன், தேசிய அமைப்பாளர் பழனி சக்திவேல், என இ.தொ.கா முக்கியஸ்த்தர்கள் உட்பட உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் கலந்துக்கொண்டார்கள்.