இலங்கை சுங்கத்தின் அனுமதியின்றி மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்ட மோட்டார் வாகனத்திற்கான இலக்கத் தகடு வழங்குவதற்கு ஒப்புதல் அளித்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட முன்னாள் மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நிஷாந்த அனுருத்த வீரசிங்க உட்பட நான்கு சந்தேக நபர்களை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மற்றும் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி ஜயதுங்க இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
அதன்படி, மூன்று சந்தேக நபர்களை தலா 1 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும், ஒரு சந்தேக நபரை 500,000 ரூபாய் சரீரப் பிணையிலும் விடுவிக்க தலைமை நீதவான் உத்தரவிட்டார்.
சந்தேக நபர்கள் வெளிநாடு செல்வதைத் தடை செய்த நீதவான், அவர்களின் கடவுச்சீட்டுகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும் உத்தரவிட்டார்.
பின்னர் வழக்கை எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள நீதிபதி உத்தரவிட்டார்.