நிந்தவூர் பகுதியில் நேற்று (31) மேற்கொள்ளப்பட்ட தேடுதலின்போது 23 கிராம் 300 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று கல்முனை பிரதான வீதி நிந்தவூர் பகுதியைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு போதைப்பொருள் விற்பனை செய்யும் முக்கிய போதைப்பொருள் வியாபாரியை பின்தொடர்ந்த அம்பாறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தின் பிரிவு ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளே இவரைக் கைது செய்துள்ளனர்.
இதன்போது சந்தேக நபரிடமிருந்து 23 கிராம் 300 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டது.
அம்பாறை பிரிவு ஊழல் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் முதித பிரியங்கரவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
சந்தேக நபர் ஐஸ் போதைப்பொருளை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட நவீன ரக கார், 3 கைத்தொலைபேசிகள் 4 வங்கி அட்டைகள் மற்றும் 1 வங்கிப் புத்தகம் ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேக நபர் நிந்தவூர் மீரா நகர் ஜும்மா பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த 33 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கிழக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் வர்ண ஜெயசுந்தரவின் ஆலோசனைக்கமைய அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வெதமுல்லவின் உத்தரவின் பேரில் அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டி.பி.எச்.கலனசிறியின் மேற்பார்வையில் அம்பாறை மாவட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சம்பத் விக்கிரமரத்னவின் வழிகாட்டுதலில் அம்பாறை மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரி கே.ஏ.எம்.பிரியங்கரவின் தலைமையிலான குழுவினர் இந்த தடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
-பாறுக் ஷிஹான்