நிதி மோசடிக்காக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் ஒருவருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்டதாக வெளியான செய்திகளை ஜனாதிபதி செயலகம் மறுத்துள்ளது.
அநுராதபுரம் சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வந்த அதுல திலகரத்ன என்ற நபர், 2025 வெசாக் பண்டிகையின்போது வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டதாகவும், இந்த சம்பவம் தொடர்பாக ஒரு பெரிய முறைகேடு நடந்திருக்கலாம் என்றும் கூறப்படும் செய்திகளை கவனத்தில் கொண்டுள்ளதாக அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அரசியலமைப்பின் பிரிவு 34 (1) இன் படி, தண்டனை பெற்ற கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது.
இந்த அரசியலமைப்பு விதியின் கீழ், தகுதியான கைதிகளின் பெயர்கள் சிறை அதிகாரிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டு நீதி அமைச்சகத்துக்கு சமர்ப்பிக்கப்படுகின்றன.
அமைச்சகத்தின் மதிப்பாய்வுக்குப் பிறகு, இறுதிப் பட்டியல் ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக ஜனாதிபதி செயலகத்துக்கு அனுப்பப்படும்.
இருப்பினும், மேற்கூறிய சம்பவம் தொடர்பாக, சிறைச்சாலை ஆணையர் ஜெனரலால் ஜனாதிபதி செயலகத்துக்கு மே 6, 2025 திபதியிட்ட குறிப்பு எண் 06/01/Proposal/Pres. Pardon/List/05-12/2025 இன் கீழ் சமர்ப்பிக்கப்பட்ட மன்னிப்புக்காக பரிந்துரைக்கப்பட்ட 388 கைதிகளின் அதிகாரபூர்வ பட்டியலில், அநுராதபுரம் சிறைச்சாலையில் நிதி மோசடி வழக்கு தொடர்பாக தண்டனை பெற்ற சம்பந்தப்பட்ட நபரின் பெயர் இல்லை.
அதன்படி, ஜனாதிபதியால் மன்னிப்பு பெற ஒப்புதல் அளிக்கப்பட்டவர்களில் இந்த நபர் இல்லை.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, ஜனாதிபதி செயலகம் நேற்று (06) குற்றப் புலனாய்வுத் துறையிடம் “ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் ஜனாதிபதி ஒப்புதல் இல்லாமல் ஒரு கைதியை விடுவித்தல்” என்ற தலைப்பில் ஒரு முறைப்பாட்டை அதிகாரபூர்வமாக சமர்ப்பித்தது, இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தக் கோரியுள்ளது.