பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை திரும்பப் பெற்று, முன்பிணையில் செல்ல அனுமதித்து ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (29) உத்தரவிட்டது.
மாலைத்தீவுக்கான தனது விஜயத்தை முடித்துக்கொண்டு இன்று காலை நாடு திரும்பிய பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, மனு ஒன்றின் மூலம் ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜரானதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2017 ஆம் ஆண்டு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வெளிநாடுகளுக்கு கையளிப்பதற்கு எதிரான போராட்டத்தின் போது நீதிமன்ற உத்தரவுகளை மீறியதற்காக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்டோர் மீது இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
நேற்று (28) வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, பாராளுமன்ற உறுப்பினர் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதால், அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றம் பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது.
இத்தகைய பின்னணியில், நாமல் ராஜபக்ஷ இன்று மனுவொன்றின் ஊடாக ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜரானார்.