ஜனாதிபதி நிதியத்திலிருந்து நிதி பெற்றுக் கொண்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்ப் பட்டியலில் உள்ள பி. இராதாகிருஷ்ணன் என்பவர் தாம் அல்ல என்றும் தமது பெயர் வி. இராதாகிருஷ்ணன் என்றும் வேலுசாமி இராதாகிருஷ்ணன் எம்பி இன்று (07) சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று சிறப்புரிமை பிரச்சினையொன்றை முன்வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திர பண்டாரவினால் பிரதமருடனான கேள்வி நேரத்தில் முன்னாள் ஜனாதிபதிகள், அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் பிள்ளைகள், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு 2005 ஆம் ஆண்டிற்குப் பின்னர் ஜனாதிபதி நிதியத்தின் மூலம் நிதி வழங்கப்பட்டது தொடர்பில் கடந்த 5ஆம் திகதி கேள்வி எழுப்பப்பட்டது.
”குறித்த பெயர்ப் பட்டியலில் 2006ஆம் ஆண்டின் முன்னாள் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான வி. இராதாகிருஷ்ணனுக்கு திருமதி கே. இராதாகிருஷ்ணனுக்காக வெளிநாட்டு புலமைப்பரிசில் வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
மேற்படி விடயத்தை அடிப்படையாகக் கொண்டு தற்போது பாராளுமன்ற உறுப்பினரான எனக்கு அவதூறு ஏற்படும் வகையில் பொய்யான செய்திகள் சமூக வலைத்தளங்களிலும் இலத்திரனியல் ஊடகங்களிலும் பரவுகின்றன.
ஆனால், அதில் குறிப்பிடப்பட்டுள்ள “பி.இராதாகிருஷ்ணன்” என்னும் பெயர் “பெருமாள் பிள்ளை இராதாகிருஷ்ணன்” ஆக இருக்க வேண்டும் என்றும், அதில் குறிப்பிடப்படுவது “வி. அதாவது வேலுசாமி இராதாகிருஷ்ணன்” என்ற என்னைப் பற்றியல்ல.
தேவேளை வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில் தனிப்பட்ட உறுப்பினர்களை இலக்காகக் கொண்டு அவதூறு ஏற்படுத்தும் வகையில் வினாக்களையும், விடைகளையும் வழங்குவதை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் அவர் தெரிவித்தார்.