அரசியல்உள்நாடு

நற்பெயருக்குக் களங்கம் – நிரோஷனிடம் ரூ. 100 கோடி கோரும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ, தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவித்ததாகக் கூறி, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் நிரோஷன் பாதுக்கவிடம் ரூ. 1,000 மில்லியன் (ரூ. 100 கோடி) மான நஷ்டஈடு கோரி சட்ட ரீதியான அறிவித்தலை (Letter of Demand) அனுப்பியுள்ளார்.

நேற்று (01) அல்லது அதனை அண்மித்த ஒரு நாளில், முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் நிரோஷன் பாதுக்க ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தியிருந்ததாகவும் இதன்போது, அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தொடர்பாக அவர் வெளியிட்ட கருத்துக்கள் அவதூறானவை என குறித்த அறிவித்தலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

“கறுப்புப் பட்டியலில் (Blacklisted) உள்ள மருந்து நிறுவனம் (Pharmaceutical company) ஒன்றின் உரிமையாளருக்குச் சொந்தமான கடனட்டையைப் பயன்படுத்தி, அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இந்தியாவில் ஒரு மில்லியன் பெறுமதியான பொருட்களைக் கொள்வனவு செய்துள்ளார்.” என நிரோஷன் பாதுக்க தெரிவித்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டை பிழை என நிரூபிக்குமாறும், இல்லையெனில் பதவி விலகத் தயாரா என்றும் நிரோஷன் பாதுக்க அங்கு கேள்வி எழுப்பியிருந்ததாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிரோஷன் பாதுக்க முன்வைத்த குற்றச்சாட்டுகள் முற்றிலும் அடிப்படையற்றவை, பொய்யானவை மற்றும் அமைச்சர் நளிந்தவின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் நோக்கில் சோடிக்கப்பட்டவை என, அமைச்சரின் சட்டத்தரணி சம்பத் யலேவத்த மூலம் அனுப்பப்பட்டுள்ள இந்த சட்ட ரீதியான கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ நீண்டகாலமாக ஊழலற்ற மற்றும் கொள்கை ரீதியான அரசியலில் ஈடுபட்டு வருபவர் என்றும், அவர் ஒருபோதும் இவ்வாறான சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என்றும் அதில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

அமைச்சரின் மீதும் அவர் எடுக்கும் தீர்மானங்கள் மீதும் பொதுமக்களுக்கு இருக்கும் நம்பிக்கையைச் சீர்குலைப்பதற்காகவே இவ்வாறான தீய எண்ணம் கொண்ட கருத்துக்கள் பரப்பப்பட்டுள்ளதாக சட்டத்தரணி அதில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதற்கமைய, அமைச்சரின் நற்பெயருக்கு ஏற்பட்ட பாதிப்புக்காக ரூ. 1,000 மில்லியனை (ரூ. 1 பில்லியன்) நட்டஈடாகக் கோரப்பட்டுள்ளது.

குறித்த அறிவித்தல் கிடைக்கப்பெற்று 14 நாட்களுக்குள் குறித்த தொகையை வழங்கத் தவறினால், நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதில் எச்சரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜனாதிபதி அலுவலகத்திற்கு சொந்தமான வாகனங்களுக்கு காப்புறுதி இல்லை!

600 சிறைக்கைதிகளுக்கு பொதுமன்னிப்பு

பாடசாலை மாணவர்களுக்கு கல்வி அமைச்சு புதிய நடவடிக்கை!