தொப்பி அணிந்து தாடிவளர்த்தால் பயங்கரவாதி, மொட்டை அடித்து தாடியை எடுத்தால் அவர்கள் அகிம்சைவாதி இதுவே இந்த நாட்டின் நிலைமையாக காணப்படுகின்றது என சமவுரிமை இயக்கத்தின் மத்திய குழு உறுப்பினர் தென்தே ஞானானந்த தேரர் தெரிவித்தார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்குமாறு கோரியும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குமாறு வலியுறுத்தியும் மட்டக்களப்பில் இன்று கையெழுத்து மற்றும் துண்டுப் பிரசுரப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
சமவுரிமை இயக்கம் மற்றும் ஈரோஸ் ஜனநாயக முன்னணி ஆகியன இணைந்து மட்டக்களப்பில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு பிரதான பஸ் நிலையத்தில் சமவுரிமை இயக்கத்தின் மத்திய குழு உறுப்பினர் தென்தே ஞானானந்த தேரர் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் தலைவர் இராஜேந்திரா, சமவுரிமை இயக்கத்தின் செயற்பாட்டாளர் எஸ்.கிருபாகரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்கவும், வலிந்துகாணாமல்ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கவும் அனைத்து இன மக்களின் உரிமையினை உறுதி செய்யும் சமவுரிமையுடைய அரசியலமைப்பினை உருவாக்கு ஆகிய கோரிக்கைகளை அடங்கியதாக இந்த கையெழுத்து போராட்டம் துண்டுப் பிரசுரப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தேரர்,
பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்க கோரியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. வட கிழக்கில் இலக்குவைத்து முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகளே இந்த சட்டமாகும்.
இந்த சட்டத்தின் மூலம் இன்று வடகிழக்கில் தமிழ் மக்களுக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன.
இன்றுவரையில் அதில் எந்த மாற்றமும் இல்லாமல் முன்னெடுக்கப்படுகின்றன.
பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்குமாறு கடந்த காலத்தில் பல வழிகளிலும் பல செயற்பாடுகளை முன்னெடுத்த அமைப்பு ஜேவிபியாகும்.
ஆனால் அந்த பயங்கரவாத சட்டத்தினை பயன்படுத்தி இன்று 12பேரை இந்த தேசிய மக்கள் சக்தி அரசு கைது செய்துள்ளது. இந்த அரசாங்கமும் பழைய அரசுகளின் அடி பாதையிலேயே செல்கின்றது.
தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்த மக்களுக்கு விரோதமாக செயற்படுகின்றது.தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னெடுத்த செயற்பாடுகளை கைவிடுமாறு அவர்களுக்கு வாக்களித்த மக்கள் சார்பில் கோருகின்றேன்.
கடந்த தேர்தல் காலத்தில் யாழில் வைத்து வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களிடம் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்திற்கு நீதியைப் பெற்றுத்தருவதற்கு நாங்களும் செயற்படுவோம் என்று கூறியவர்கள் இன்று வரையில் அதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்கவில்லை.
பயங்கரவாத தடை பழைய சட்டத்தினை திருத்தப்போகின்றோம், நீக்கப்போகின்றோம் என்று கூறியவர்கள் இன்று புதிய பயங்கரவாத சட்டத்தினை கொண்டு வருகின்றார்கள்.
கடந்த காலத்தில் ரணில்,கோத்தபாய ராஜபக்ஸவின் பாதையிலேயே இந்த அரசாங்கமும் செயற்படுகின்றது.
இதன் காரணமாக மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிரான குரல்கொடுக்கவேண்டும்.
இஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிக்கர் ஒட்டியதற்காக பழைய பயங்கரவாத தடைச்சட்டத்தினை பயன்படுத்தி முஸ்லிம் இளைஞர் கைது செய்யப்பட்டார். நானும் இஸ்ரேலுக்கு எதிராக முகப்புத்தகத்தில் பதிவு செய்துள்ளோம்.
ஆனால் இந்த செயற்பாடு இந்த பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலம் தமிழ்-முஸ்லிம் இளைஞர்களை கைது செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றது.மக்கள் இதற்காக இவர்களுக்கு வாக்களிக்கவில்லை.
30 வருட காலமாக வடகிழக்கில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும், அவர்களின் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை, காணாமல் ஆக்கப்பட்டவர்கள், காணி பிரச்சினையென பல்வேறு பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படவில்லை.
இவ்வாறான பிரச்சினைகளுக்கு தீர்வுகள் வழங்கப்படவில்லையென்றால் கோத்தபாயவுக்கு நடைபெற்றதே உங்களுக்கும் நடக்கும்” என்றார்.
-கிருஷ்ணகுமார்