பொலிஸ்மா அதிபர் ரி.எம்.டபிள்யூ.தேசபந்து தென்னக்கோனினால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் துர்நடத்தை மற்றும் பதவித் தத்துவங்களை பாரதூரமான வகையில் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட குழுவின் இறுதி அறிக்கை எதிர்வரும் வாரத்திற்குள் சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
குறித்த அறிக்கை தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாகக் குழு தெரிவித்துள்ளது.
உயர்நீதிமன்ற நீதியரசர் பி.பி.சூரசேன தலைமையில் மற்றும் நீதிபதி டபிள்யூ.எம்.என்.பி.இத்தவல மற்றும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஈ.டபிள்யூ.எம் லலித் ஏக்கநாயக்க ஆகியோர் குறித்த குழுவில் உள்ளடங்குகின்றனர்.
இந்த விசாரணைக் குழு 10இற்கும் மேற்பட்ட சந்தர்ப்பங்களில் கூடி சாட்சியங்களைப் பதிவு செய்தது.
மேலும், ஜூலை 16 ஆம் திகதி முதல் தினமும் கூடி சாட்சியங்களைப் பதிவு செய்ய விசாரணைக் குழு நடவடிக்கை எடுத்திருந்த நிலையில், விசாரணைக் குழுவின் சாட்சியங்களைப் பதிவு செய்யும் பணி சமீபத்தில் நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.