தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தைச் சேர்ந்த முதலாமாண்டு மாணவர்கள் நால்வர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையிலும் ஒலுவில் பிரதேச வைத்தியசாலையில் மாணவர் உட்பட பல்கலைக்கழக சாரதி என ஆறு பேர் தற்போதுவரை சிகிச்சை பெற்று வருவதாக தென்கிழக்கு பல்கலைக்கழகப் பதிவாளர் எம்.ஐ. நௌபர் தெரிவித்தார்.
இதேவேளை விடுதியில் தங்கி கல்வி கற்றுவரும் 1 ஆம் வருட பொறியியல் பீட மாணவர்கள் அனைவரும் உடனடியாக விடுதிகளை விட்டு வெளியெறுமாறு பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கமைய அனைத்து மாணவர்களும் வெளியேறியுள்ளதாக பல்கலைக்கழக தகவல்கள் தெரிவித்துள்ளன.
சிரேஷ்ட மாணவர்களின் கல்விச் செயற்பாடுகள் வழமை போன்று நடைபெற்று வருவதுடன் குறித்த மோதலானது ஒரே வகுப்பைச் சேர்ந்த முதலாம் வருட மாணவர்களின் இரு குழுக்களுக்கிடையே விடுதியில் ஏற்பட்டதாக பல்கலைக்கழக நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.
இதனால் அம்பாறை ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீடத்தின் முதலாம் வருட மாணவர்களை நேற்று இரவு 8 மணியுடன் விடுதிகளிலிருந்து வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பல்கலைக்கழகத்தில் நடைபெறவிருந்த பரீட்சையும் பிற்போடப்பட்டுள்ளதாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீடத்தின் முதலாம் வருட மாணவர்கள் இடையே நேற்று (15) ஏற்பட்ட மோதலை அடிப்படையாகக் கொண்டு இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது
இந்தநிலையில் நேற்று இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் ஆரம்பக்கட்ட விசாரணைகள் நடத்தப்படுவதாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் தெரிவித்துள்ளார்.