கடந்த 7 மாதங்களில் 79 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால இன்று (09) பாராளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போது தெரிவித்தார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் 21 முதல் நேற்று (08) வரையிலான காலப்பகுதியில் இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 52 பேர் உயிரிழந்ததுடன், 35 பேர் காயமடைந்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 62 சம்பவங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களால் மேற்கொள்ளப்பட்டவை எனவும், 17 சம்பவங்கள் வேறு காரணங்களால் இடம்பெற்றவை எனவும் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் தொடர்பாக இதுவரை 260 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் 229 பேர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் எனவும் அமைச்சர் இதன்போது கூறினார்.
குற்றவியல் கும்பல்களை ஒடுக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்துள்ளதாகவும், 2022, 2023 மற்றும் 2024 ஆகிய காலப்பகுதிகளை பரிசீலிக்கும் போது குற்றங்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்படவில்லை எனவும் குறிப்பிட்ட அமைச்சர், எந்தவொரு சூழ்நிலையிலும் இழக்கப்படுவது மனித உயிர்கள் எனவும் தெரிவித்தார்.
புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் கூறினார்.