பேச்சுரிமையை தவறாக பயன்படுத்தும் ஊடகத்துக்கு ஒன்றை தெளிவாக குறிப்பிட்டுக் கொள்ள விரும்புகிறேன்’ தம்பிக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு ஒருபோதும் கிடையாது’ என்பதை அவர்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
எமது சட்டவாட்சி மற்றும் அமைதி ஆகியவற்றை கோழைத்தனம் என்று நினைத்து எம்முடன் செயற்படுபவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.
தவறிழைத்து விட்டு மன்னிப்பு கோரினால் அதை ஏற்க முடியாது என்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (04) நடைபெற்ற 2023 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
ஊழலுக்கு எதிராகவே மக்கள் எமக்கு ஆணை வழங்கியுள்ளார்கள். மக்களாணைக்கு அமைவாகவே நாங்கள் செயற்படுகிறோம்.
ஊழலை இல்லாதொழிக்கவும், ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை கடுமையாக முன்னெடுப்பதற்கும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
ஊழல் எதிர்ப்புச் சட்டம் 2023 ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. இருப்பினும் அந்த சட்டத்தின் செயலாற்றுகைக்கான ஒழுங்குவிதிகள் தயாரிக்கப்படவில்லை.
இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் சுயாதீனத்தன்மை மேம்பாட்டை கருத்திற் கொண்டு இந்த ஒழுங்குவிதிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
உயர்மட்ட அரசியல் தரப்பினர் மற்றும் அரச அதிகாரிகளின் ஊழல் மோசடியால் இந்த நாடு வங்குரோத்து நிலையடைந்துள்ளது என்று பல வழக்கு தீர்ப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்குகளுக்கு அமைய மஹிந்தானந்த அளுத்கமகே உட்பட பல அரசியல்வாதிகள் இன்று சிறையில் உள்ளார்கள்.
மக்களின் வரிப்பணத்தை முகாமைத்துவம் செய்யும் தரப்பினர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்று நீதித்துறை அனைவருக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது.ஆளும் தரப்புக்கும் இந்த எச்சரிக்கை சாரும்.
மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். ஆனால் அரசாங்கம் பொய்யுரைப்பதாக எதிர்க்கட்சிகள் குறிப்பிட்டுக் கொள்கிறார்கள்.
எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கடந்த வாரம் ஊடக சந்திப்பை நடத்தி அரசுக்கு சொந்தமான வாகனம் ஒன்று பெறுமதிக்கு மாறாக குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
இந்த கருத்து தொடர்பில் வடமேல் மாகாண ஆளுநர் ஊடக சந்திப்பை நடத்தி பல விடயங்களை குறிப்பிட்டு, உரிய ஆவணங்களை வெளிப்படுத்தி தயாசிறி ஜயசேகர குறிப்பிட்ட கருத்து பொய் என்று உறுதிப்படுத்தியுள்ளார்.
வடமத்திய மாகாண ஆளுநர் சட்ட நடவடிக்கை எடுப்பதாக அறிவித்ததன் பின்னர் தயாசிறி ஜயசேகர தான் தவறாக குறிப்பிட்டுள்ளதாக ஊடக சந்திப்பை நடத்தி குறிப்பிட்டு தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கோரியுள்ளார்.
ஆகவே யார் பொய்யுரைப்பது என்பதை மக்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும். 323 கொள்கலன்கள் தொடர்பில் குறிப்பிடப்படுகிறது. தயாசிறி ஜயசேகர மற்றும் உதய கம்மன்பில ஆகியோருக்கு குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைக்கு முன்னிலையாகுமாறு அழைப்பு விடுத்துள்ளது.
விசாரணைக்கு பின்னர் ஊடக சந்திப்பை நடத்தி மன்னிப்பு கோரினால் அனைத்தும் சரியாகிவிடாது. தவறு செய்ததன் பின்னர் மன்னிப்பு கோரினால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது.
பொய்யுரைக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் காலம் நிறைவடைகிறது. ஆகவே எதிர்க்கட்சிகள் இனியாவது முட்டாள்தனமான அரசியல் கலாச்சாரத்தில் இருந்து விடுபட வேண்டும்.
எதிர்க்கட்சிகளின் பொய்களுக்கு முன்னுரிமை வழங்கும் ஒருசில ஊடகங்கள் உள்ளன.பொய்களை உண்மையை போன்றே குறிப்பிடுகின்றன. எதிர்க்கட்சியில் இருக்கும் போது பேச்சுரிமையை மதித்து செயற்பட்டோம்.
இப்போதும் அவ்வாறே செயற்படுகிறோம். எமது சட்டவாட்சி மற்றும் அமைதி ஆகியவற்றை கோழைத்தனம் என்று நினைத்து எம்முடன் செயற்பட்டால் அவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.
நீதிமன்றத்தை நான் அவமதித்ததாக எதிர்க்கட்சியின் உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிடுகிறார். சுமார் 20 ஆண்டுகாலமாக நீதித்துறையில் சேவையாற்றி எனது குடும்பத்தை காப்பாற்றியுள்ளேன்.
எனது குடும்பத்தாரை வாழ வைத்துள்ளேன். எமக்கு குடும்ப சொத்துக்கள் ஏதும் கிடையாது. பாட்டிமார்கள் சொத்துக்களையும், நிலங்களையும் வழங்கவில்லை.
நீதிமன்றத்துக்கு எவ்வாறு மதிப்பளிக்க வேண்டும் என்பதை நான் நன்கு அறிவேன். திரிபுப்படுத்தப்பட்ட செய்திகளுக்கு மாத்திரம் இவர்கள் முன்னுரிமை வழங்குகிறார்கள்.
நீதிமன்றம் சுயாதீனமாக செயற்பட வேண்டும் என்பதை எதிர்க்கட்சியில் இருக்கும் போது உறுதியாக வலியுறுத்தினோம். ஆட்சிக்கு வந்ததன் பின்னர் சட்டவாட்சியின் சுயாதீனத்தன்மையை உறுதிப்படுத்தியுள்ளோம்.
பேச்சுரிமை தவறாக பயன்படுத்தும் ஊடகத்துக்கு ஒன்றை தெளிவாக குறிப்பிட்டுக் கொள்ள விரும்புகிறேன்’ தம்பிக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு ஒருபோதும் கிடையாது’ என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
தம்பிக்கு பொதுமன்னிப்பு பெற்றுக்கொள்வதற்காகவே இந்த ஊடகம் போலியான குற்றச்சாட்டுக்களை அரசாங்கத்துக்கு எதிராக முன்வைக்கிறது.
எமது அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் அந்த தம்பி எவ்வித நோயும் இல்லாமல் வைத்தியசாலையில் இருந்தார்.
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கோட்பாடுகளுக்கு அமைய தம்பியை மீண்டும் சிறைக்கு அனுப்பியுள்ளோம். ஆகவே சட்டத்தின் ஆட்சிக்கு அமைவாகவே அனைவரும் செயற்பட வேண்டும் என்றார்.