2025 வரவு செலவுத் திட்டத்திற்கமைய, அரச துறையில் ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்கு இணையாக தனியார் துறை ஊழியர்களுக்கும் தேசிய குறைந்தபட்ச வேதனத்தை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நேற்று (13) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இவ்வாறு 27 தீர்மானங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதற்கிணங்க, 2025 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க, வேலையாளர்களின் தேசிய குறைந்தபட்ச வேதன (திருத்தச்) சட்டம், 2025 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க, வேலையாட்களின் வரவுசெலவுத்திட்ட நிவாரணப்படி (திருத்தச்) சட்டம், மற்றும் 2025 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க வேலையாட்களின் வரவுசெலவுத்திட்ட நிவாரணப்படி (திருத்தச்) சட்டம், 2025.04.01 ஆம் திகதி தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் 2025.07.22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
குறித்த ஏற்பாடுகளுக்கமைய 2025.04.01 ஆம் திகதி தொடக்கம் மாதாந்த குறைந்தபட்ச வேதனம் ரூ. 17,500 தொடக்கம் ரூ. 27,000 வரைக்கும் அதிகரிக்கப்படுவதுடன், 2026.01.01 ஆம் திகதி தொடக்கம் மாதாந்த குறைந்தபட்ச வேதனம் ரூ. 30,000 வரைக்கும் அதிகரித்துள்ளது.
அவ்வாறே மாதாந்த குறைந்தபட்ச வேதன அதிகரிப்பு ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதி, மேலதிக நேரக் கொடுப்பனவு, பணிக்கொடை, மகப்பேற்றுக் கொடுப்பனவு மற்றும் விடுமுறை தினக் கொடுப்பனவு போன்ற அனைத்து நியதிச்சட்டக் கொடுப்பனவுக்ளுக்கு ஏற்புடையதாக்கிக் கொள்ள வேண்டும்.
அத்துடன், இடைத்தரகர் அல்லது ஒப்பந்தக்காரர் மூலமாக ஏதேனுமொரு தொழிற்சாலையில் அல்லது சேவையில் ஈடுபடுத்தப்படும் ஊழியர்கள் தொடர்பாக நெருக்கமான தொழில் வழங்குநர் போலவே இறுதி தொழில் வழங்குநர் உள்ளிட்ட அனைத்து தொழில் வழங்குநர்களும் குறித்த ஒழுங்குவிதிகளுக்கு இணங்கியொழுகுவதற்கு சட்டக் கடப்பாடு உள்ளது.
குறித்த ஏற்பாடுகளை அமுல்படுத்துவதற்காக தொழில் ஆணையாளர் நாயகம் அவர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதுடன், அதற்கிணங்க, குறித்த ஏற்பாடுகள் தொடர்பாக பத்திரிகை விளம்பரத்தின் மூலம் ஏற்புடைய தரப்பினர்களுக்கு தற்போது அறிவிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இத்தகவல் தொழில் அமைச்சரால் அமைச்சரவையின் கவனத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த ஏற்பாடுகள் சரியான வகையில் அமுல்படுத்தப்படுவதை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான படிமுறைகளை மேற்கொள்வதற்கு அமைச்சரவை உடன்பாடு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.