ரஷிய ஜனாதிபதி விளாதிமீர் புடின் இந்தியாவுக்கு செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யாவிடமிருந்து மசகு எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு அதிக வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்து வருகிறார்.
ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கி வரும் இந்தியா மீது 50 சதவிகித வரியையும் ட்ரம்ப் விதித்துள்ளார்.
இந்த நிலையில், இந்தியாவுக்கு இம்மாத இறுதிக்குள் ரஷ்ய அதிபர் விளாதிமீர் புடின் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் போர் தொடங்கியதிலிருந்து, வெளிநாடுகளுக்குச் செல்வதை பெரும்பாலும் புடின் தவிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் ரஷ்யா சென்றிருந்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், அதிபர் புடினை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்ததாக அந்நாட்டு செய்தி நிறுவனம் (Interfax) கூறியுள்ளது.
இருப்பினும், மத்திய அரசு தரப்பில் இருந்து அதிகார பூர்வத் தகவல்கள் எதுவும் இன்னும் பெறப்படவில்லை.
மேலும், இம்மாத இறுதி நேரத்தில்தான் பிரதமர் நரேந்திர மோடி, சீனாவுக்கு செல்லவுள்ளார். ஆகையால், அதற்கேற்றாற்போல திகதியும் மாற்றியமைக்கப்படலாம்.
ரஷ்யாவிடம் நீண்டகாலமாகவே மசகு எண்ணெய் வாங்கி வரும் இந்தியா உட்பட மற்றைய நாடுகளுக்கும் டிரம்ப் வெளிப்படையாக எச்சரிக்கை விடுத்ததையடுத்து, ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் சில இந்திய நிறுவனங்கள், தங்கள் வர்த்தகத்தை நிறுத்திக் கொண்டன.
இருப்பினும், முழுமையாக நிறுத்தப்படவில்லை. இந்தியாவுக்கு முதலில் 25 சதவிகிதம் வரி விதித்த ட்ரம்ப், தொடர்ந்து மேலும் 25 சதவிகிதம் வரி விதித்தார்.
-பி.பி. சி