அரசியல்உள்நாடு

டித்வா சூறாவளி நிவாரண திட்டங்கள் ஆரம்பம் – ஜனாதிபதி அநுர நாளை கண்டிக்கு விஜயம்

‘டித்வா’ சூறாவளியினால் கண்டி மாவட்டத்தில் முழுமையாகவும் பகுதியளவிலும் வீடுகளை இழந்தவர்களுக்குப் புதிய வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்கும் திட்டம் மற்றும் இழப்பீடு வழங்கல் மற்றும் பல அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வுகள் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நாளை (06) கண்டியில் நடைபெறவுள்ளன.

அதன்படி, ‘டித்வா’ சூறாவளியினால் பாதிக்கப்பட்ட குண்டசாலை, மெததும்பர, பாததும்பர மற்றும் பன்விலை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த கைத்தொழிற்துறையினர்களுக்கும், வீடுகளை இழந்த குடும்பங்களுக்கும் இழப்பீடு வழங்கும் நிகழ்வு நாளை முற்பகல் 9.00 மணிக்கு குண்டசாலை மத்திய மாகாண சபை மண்டபத்தில் ஜனாதிபதி தலைமையில் நடைபெறும்.

டித்வா சூறாவளியினால் தொழிற்சாலைகள் அல்லது இயந்திர உபகரணங்கள் சேதமடைந்தவர்கள், தமது வியாபாரத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்காக இழப்பீட்டுத் தொகையாக தலா 2 இலட்சம் ரூபாய் வழங்கப்படவுள்ளது. சிறு, நடுத்தர அல்லது பாரிய அளவிலான கைத்தொழில்கள் என்ற வேறுபாடின்றி, பதிவு செய்யப்பட்ட அனைத்து வர்த்தகங்களுக்கும் ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரில் இந்த நிதி உதவி வழங்கப்படுகிறது.

அத்தோடு கண்டி மாவட்டத்தில் வீடுகளை முழுமையாக இழந்தவர்கள் புதிய வீடுகளை அமைத்துக் கொள்வதற்காக ஒதுக்கப்பட்டுள்ள 50 இலட்சம் ரூபாயில், முதல் தவணையாக தலா 20 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகள் இதன்போது வழங்கப்படும். தமக்குச் சொந்தமான காணியில் வீடு கட்டுபவர்கள் அல்லது அரசாங்கத்தினால் வழங்கப்படும் காணியில் வீடு கட்டுபவர்கள் இதில் அடங்குவர்.

அத்துடன், சூறாவளியினால் வீடுகளை இழந்த மற்றும் மண்சரிவு அபாயம் உள்ளதாக அடையாளம் காணப்பட்ட குடும்பங்களை மீளக்குடியேற்றுவதற்கான காணி வழங்கல் மற்றும் இழப்பீடு வழங்கும் நிகழ்வு நாளை (06) பிற்பகல் நியாங்கொட பாடசாலை விளையாட்டு மைதானத்தில் ஜனாதிபதி தலைமையில் நடைபெறும்.

பகுதியளவில் வீடுகள் சேதமடைந்தவர்களுக்கும் விரைவான நிவாரணங்களை வழங்கும் நோக்கில் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவுள்ளது. அத்துடன், புதிய வீடமைப்புத் திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் முகமாக புதிய வீடொன்றை நிர்மாணிக்கும் நிகழ்விலும் ஜனாதிபதி இணைந்து கொள்வார்.

அத்தோடு, கண்டி – யாழ்ப்பாணம் வீதியில் (A-009) அமைந்துள்ள மகைய்யாவ சுரங்கப்பாதை கட்டுமானப் பணிகளையும் நாளை முற்பகல் ஜனாதிபதி ஆரம்பித்து வைக்கவுள்ளார். மேலும், இடைநிறுத்தப்பட்டிருந்த கெட்டம்பே மேம்பால நிர்மாணப் பணிகளும் ஜனாதிபதி தலைமையில் நாளை(06) மீண்டும் தொடங்கி வைக்கப்படும்.

-ஜனாதிபதி ஊடகப் பிரிவு

Related posts

கொலன்னாவையில் இடிக்கப்பட்ட 24 வீடுகள்

editor

கோடீஸ்வரர்களை ஏமாற்றிய நிதி நிறுவன உரிமையாளர்

வாகனங்களில் அடையாள சின்னங்கள் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ வெளியிட்ட தகவல்

editor