அரசியல்உள்நாடு

ஜீவன் தொண்டமான் எம் பியின் சாணக்கிய பேச்சுவார்த்தை வெற்றி!

மூடப்பட்டிருந்த அக்கரபத்தனை பெருந்தோட்ட நிறுவனத்திற்கு உட்பட்ட டயகம–அக்கரபத்தனை கிழக்கு பிரிவு தேயிலை தொழிற்சாலையானது, இ.தொ.கா பொதுச்செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் அவர்களின் சாணக்கியமான பேச்சுவார்த்தையினால் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

அக்கரபத்தனை பெருந்தோட்ட நிறுவனத்திற்கு உட்பட்ட டயகம–அக்கரபத்தனை கிழக்கு பிரிவு தேயிலை தொழிற்சாலை கடந்த நவம்பர் மாதம் 12ஆம் திகதி முதல் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது.

இதனால் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த தொழிலாளர்கள் தொழிலின்றி பாரிய சிரமங்களை சந்தித்து வந்தனர்.

இந்த பிரச்சினை தொடர்பாக ஜீவன் தொண்டமான் அவர்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து, தொடர்புடைய தரப்புகளுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டிருந்தார்.

கணக்காய்வு குழுவினரின் ஆய்வின்போது தேயிலை நிறைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் தொடர்பாக முதற்கட்ட விசாரணைகளில் இரண்டு உயர் அதிகாரிகள் முறைகேடு செய்தது கண்டறியப்பட்டதை அடுத்து தொழிற்சாலை விசாரணை முடியும் வரை மூடப்படுவதாக நிறுவனம் அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து தோட்ட நிர்வாகத்துடன் நடைபெற்ற ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தையில் தோட்ட நிறுவனத்தின் தலைமை அதிகாரி கலந்து கொள்ளாததால் எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை.

பின்னர் ஹட்டன் உதவி தொழில் ஆனையாளர் காரியாலயத்தில் இ.தொ.கா சிரேஷ்ட இயக்குனர் லோகதாஸ் அவர்களின் கோரிக்கையின்படி 2025 டிசம்பர் மாதம் 09ஆம் திகதி தீர்க்கமான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

ஹட்டன் உதவி தொழில் ஆனையாளர் தலைமையில் இடம்பெற்ற இப்பேச்சுவார்த்தையில், தொழிற்சாலையை மீண்டும் திறப்பதற்கு 3 மாத கால அவகாசம் கோரிய தோட்ட நிறுவனம் முன்வைத்த வேண்டுகோளை ஜீவன் தொண்டமான் திடமாக நிராகரித்திருந்தார்.

“குற்றம் செய்தது அதிகாரிகள்; தொழிலாளர்களின் வாழ்க்கையில் தண்டனையை திணிக்கக் கூடாது.

எமது மக்களுக்கு உடனடி தொழில் வாய்ப்பு வழங்க தொழிற்சாலை விரைவில் திறக்கப்பட வேண்டும்,” என வலியுறுத்தினார்.

மேலும், விசாரணை நிறைவடையும் வரை வேறு தோட்டங்களில் பணிபுரியும் இரண்டு அதிகாரிகளை மாற்றீடாக நியமித்து தொழிற்சாலையை மீண்டும் செயல்படுத்தலாம் எனவும் பரிந்துரைத்தார்.

நீண்டநேர பேச்சுவார்த்தையின் முடிவில், இம்மாதம் ஜனவரி 02ஆம் திகதிக்குள் தொழிற்சாலையை மீண்டும் திறப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக தோட்ட நிர்வாகம் எழுத்து மூலம் ஒப்புதல் வழங்கியது.

புரிந்துணர்வு பத்திரத்தில் தோட்ட நிர்வாகத்துடன் இணைந்து ஹட்டன் உதவி தொழில் ஆனையாளர் மற்றும் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் அவர்களும் கையெழுத்திட்டிருந்தார்கள்.

இதன் பயனாக அக்கரபத்தனை பெருந்தோட்ட யாக்கம் இணங்கியதற்கு அமைவாக டயகம கிழக்கு பிரிவு தேயிலை தொழிற்சாலை இம்மாதம் 02ஆம் திகதி வழமைப்போல் தமது தொழிற்சாலை பணிகளை ஆரம்பித்துள்ளது.

மக்கள் அனைவரும், இ.தொ.கா பொதுச்செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் அவர்களுக்கு மகிழ்ச்சியுடன் தமது நன்றிகளையும் தெரிவித்துக்கொண்டார்கள்.

-பெ.கோபிநாத்

Related posts

சில பகுதிகளில் 100 மி.மீற்றர் வரையான பலத்த மழை

புதிய தூதுவர்கள் ஜனாதிபதியிடம் தமது நற்சான்றிதழ்களை கையளித்தனர்!

வட்டுக்கோட்டை சந்தியில் விபத்து – முச்சக்கர வண்டி சாரதி தலையில் காயம்!