சவூதி அரேபியா ஜித்தா நகரிற்கான இலங்கை கொன்ஸல் ஜெனரலாக முஸ்லிம் அல்லாத ஒருவரை நியமிப்பது தொடர்பில் அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அக்கரைப்பற்று மாநகரசபை உறுப்பினர் சபூர் ஆதம் வலியுறுத்தியுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அவர், குறித்த நியமனம் நிர்வாக ரீதியானது மட்டுமென அரசாங்க ஊடகப் பேச்சாளர் டாக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ கூறியிருந்த கருத்தை சுட்டிக்காட்டி, “ஜித்தா கொன்ஸல் ஜெனரலின் பதவி சாதாரண நிர்வாகப் பதவி அல்ல; அது மத, சமூக மற்றும் மனிதாபிமான பொறுப்புகளுடன் நேரடியாக தொடர்புடையது” எனத் தெரிவித்தார்.
சவூதி அரேபியாவில் பல ஆண்டுகள் தொழில் புரிந்த அனுபவத்தையும், இலங்கையர்களுக்கான தம்மாம் கம்யூனிட்டி பாடசாலையின் (Community School for Sri Lankans) இஸ்தாபர்களில் ஒருவராக செயல்பட்ட அனுபவத்தையும் மேற்கோள் காட்டிய அவர், “ஜித்தா கொன்ஸல் ஜெனரல் ஹஜ், உம்ரா யாத்திரைகளுக்காகச் செல்லும் இலங்கை முஸ்லிம்களின் நலன்களை ஒருங்கிணைப்பதும், புனிதப் பிரதேசங்களில் நேரடியாகப் பணிகளை முன்னெடுப்பதும் அவரது கடமைகளில் அடங்குகின்றன” என குறிப்பிட்டார்.
மேலும், தொழில் நிமித்தமாக சவூதி அரேபியாவிற்கு சென்ற இலங்கையர்கள் மரணமடைந்தால், ஜனாஸா மற்றும் அடக்கம் தொடர்பான மத, சட்ட நடைமுறைகளில் பல சிக்கல்கள் ஏற்படுவதாகவும், “இத்தகைய சூழ்நிலைகளை ஒரு முஸ்லிமாக இருப்பவரால் தான் இலகுவாகவும் நடைமுறையிலும் முகம் கொடுக்க முடியும்” என்றும் சபூர் ஆதம் தெரிவித்தார்.
தகுதிகள், திறமைகள் மற்றும் அனுபவம் முக்கியம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை என தெரிவித்த அவர்,
“அதே நேரத்தில் இனம், மதம் போன்ற அடையாளங்களை முற்றாகப் புறக்கணிப்பது ஏற்கனவே நிலவும் கட்டமைக்கப்பட்ட ஏற்றத்தாழ்வுகளை வலுப்படுத்தும்” எனக் கூறினார்.
பிரதிநிதித்துவம் என்பது ஒரு அன்பளிப்பு அல்ல; அது சமூக பன்முகத்தன்மையை அங்கீகரிப்பதும், நியாயம் மற்றும் சமத்துவத்திற்கான உண்மையான அர்ப்பணிப்புமாகும் என அவர் சுட்டிக்காட்டினார்.
“திறமை மற்றும் பிரதிநிதித்துவம் எதிர்மறையானவை அல்ல; அவை ஒன்றுக்கொன்று துணைபுரிவவை” என்றும் அவர் வலியுறுத்தினார்.
இவ்விடயத்தை அரசாங்கத்தின் உயர் மட்டத்திற்கு எடுத்துச் சென்று உரிய நடவடிக்கை எடுக்க, அரசாங்கத்தில் செல்வாக்கு செலுத்தும் முஸ்லிம் பிரதிநிதிகள் முன்வர வேண்டும் என்றும் சபூர் ஆதம் கேட்டுக்கொண்டார்.
-அம்பாறை நிருபர் நூருல் ஹுதா உமர்
