தேசிய மீலாதுன் நபி விழா ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (05) பிற்பகல் அம்பலாந்தோட்டை, மெலே கொலனி கிராமத்தில், மஸ்ஜிதுல் அரூஸியா ஜும்ஆ பள்ளிவாசல் மைதானத்தில் நடைபெற்றது.
புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் இஸ்லாமிய மதத் தலைவர் முஹம்மது நபியின் பிறந்தநாளை நினைவு கூறும் வகையில் இந்த தேசிய விழா ஏற்பாடு செய்யப்பட்டதுடன், பிரதேசத்தின் மகா சங்கத்தினர் உட்பட அனைத்து மதங்களையும் சேர்ந்த மக்களின் ஆதரவும் பங்களிப்பும் இதற்கு கிடைத்திருப்பது இதன் சிறப்பம்சமாகும்.
2025 தேசிய மீலாதுன் நபி விழாவிற்காக வெளியிடப்பட்ட நினைவு முத்திரை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டதுடன், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் முஸ்லிம் சமூகத்தின் கலாசார மற்றும் வரலாற்றுப் பெறுமதியை மையமாகக் கொண்டு தொகுக்கப்பட்ட “ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் முஸ்லிம் சமூகத்தின் வரலாறு மற்றும் வளர்ச்சி” என்ற நூலும் வழங்கி வைக்கப்பட்டது.
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் கல்வி பயிலும் இன, மத பேதமின்றி அனைத்து மாணவர்களிடையே இன நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக நடத்தப்பட்ட சித்தரப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கும் நிகழ்விலும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பங்கேற்றார்.
2025 தேசிய மீலாதுன் நபி விழாவில் பங்கேற்றதற்காக ஜனாதிபதிக்கு நினைவுப் பரிசும் வழங்கப்பட்டதுடன், ஹம்பாந்தோட்டை மாவட்ட முஸ்லிம் மக்களும் முஸ்லிம் ஜும்மா பள்ளிவாசலின் நிர்வாக சபையும் ஜனாதிபதிக்கு விசேட நினைவுப் பரிசையும் வழங்கின.
இலங்கையின் ஹஜ் யாத்திரை ஒதுக்கீட்டை மேலும் அதிகரிப்பது குறித்து தற்போது கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாக, இந்த விழாவில் உரையாற்றிய புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனெவி தெரிவித்தார். அதன்படி, இந்த நாட்டில் உள்ள முஸ்லிம்களின் ஹஜ் யாத்திரைக்காக செலவிட வேண்டிய தொகையைக் குறைக்கவும், யாத்ரீகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும் என்றும் அமைச்சர் கூறினார்.
எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் நேற்று (04) இரவு இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்த அனைவரின் குடும்பத்தினருக்கும் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் இரங்கலையும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர் முனீர் முழப்பர், அமைதி, ஒற்றுமை மற்றும் ஒருவருக்கொருவர் மரியாதை செலுத்துதல் ஆகியவை நபிகள் நாயகத்தின் வழிகாட்டுதல்கள் என்றும் குறிப்பிட்டார்.
அனைத்து மக்களிடையேயும் அமைதியும் நல்லிணக்கமும் நிலைநாட்டப்படும் ஒரு அழகான நாடு என்பதே தற்போதைய அரசாங்கத்தின் அபிலாஷை என்று சுட்டிக்காட்டிய பிரதி அமைச்சர், 2025 தேசிய மீலாதுன் நபி விழாவை வெற்றிகரமாக நடத்துவதற்கு அப்பகுதி மக்கள் பெரும் பங்களிப்பை வழங்கியதை நினைவு கூர்ந்ததுடன், இந்த ஒற்றுமை ஒரு அழகான நாட்டின் மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்துகிறது என்றும் குறிப்பிட்டார்.
மகா சங்கத்தினர் மற்றும் மதத் தலைவர்கள், பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி,புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் கமகெதர திஸாநாயக, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சர் ருவன் செனரத், ஹம்பாந்தோட்டை மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் நிஹால் கலபத்தி உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் டபிள்யூ.பி. சேனாதீர, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.எம் நவாஸ் ஆகியோருடன் அரச அதிகாரிகள், வெளிநாட்டு தூதுவர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
-ஜனாதிபதி ஊடகப் பிரிவு