வகைப்படுத்தப்படாத

சைட்டம் கல்லூரி பிரச்சினைக்கு தீர்வு – ஜனாதிபதி

(UDHAYAM, COLOMBO) – சர்ச்சைக்குரிய தனியார் மருத்துவக்கல்லூரியான சைட்டம் (South Asian Institute of Technology and Medicine) தொடர்பான பிரச்சினைக்கு தீர்வாக நிர்வாக சபையொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

தனிநபர் உரிமையிலிருந்து இதனை விடுவிப்பது நோக்கமாகும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மாளிகையில் ஊடக நிறுவனங்களின் முக்கியஸ்தர்களுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பின்போது ஜனாதிபதி இவ்வாறு கருத்து வெளியிட்டார்.

ஜனாதிபதி இது தொடர்பாக தெரிவிக்கையில்,

பல்கலைககழங்களிலிருந்து வெளியேறும் மாணவர்களுக்கு அநீதி ஏற்பட இடமளிக்கப்பட மாட்டாது. இலவச கல்வியை தொடர்ந்தும் வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு கொழும்பு பங்கு சந்தையும் முன்வந்துள்ளதாகவும் இதற்கான நிர்வாக சபையொன்று நியமிக்கப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

நாட்டின் பொருளாதாரம் சரியான பாதைக்கு திரும்பியுள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் புதிய வடிவத்தை வழங்குவது எதிர்பார்ப்பாகும் என்று சுட்டிக்காட்டினார்.

அரச நிறுவனங்களின் செயற்றினை வலுப்படுத்துவது இதன் நோக்கமாகும். கணக்காய்வு சட்டமூலம் விரைவில் பாராளுமன்றில் சமர்பிக்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.

இதன் நன்மைகளை விரைவில் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு மக்களுக்கு கிடைக்கும். நாட்டின் வெளிநாட்டு சொத்துக்களின் பெறுமதியும் அதிகரித்துள்ளது. இந்தத்தொகை 5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை அதிகரித்திருக்கிறது. இது மேலும் அதிகரிக்கும் என்றும் ஜனாதிபதி தெரிவித்ததோடு , இதன் மூலம் நாடு சுபீட்சமாகும் என்றும் நம்பிக்கை வெளியிட்டார்.

மீதொட்டமுல்ல சம்பவம் பற்றி அறிக்கை தயாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவர் நியமிக்கப்படுவார் என ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.

ஒரு மாத காலத்திற்குள் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் பக்கசார்பற்ற சுயாதீன அறிக்கையை பெற்றுக்கொள்வது இதன் நோக்கமாகும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அனர்த்ததினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி பிரச்சினையாக அமையாது என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகளை வழங்கும் நடவடிக்கை நாளையும் நாளை மறுதினமும் இடம்பெறவுள்ளது. ஒரு வீட்டின் பெறுமதி 45 இலட்சம் ரூபாவாகும். அரசாங்க எதிரப்பாளர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டைப் போன்று நாட்டின் நிதி நெருக்கடிகள் இல்லை என்றும் அவர் மேலும் வலியுறுத்தினார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையின் அதிகாரங்களை குறைக்கவோ அதனை ரத்துச் செய்யவோ என்றும் முன் நிற்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

அரசாங்கம் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துகிறது. மொரகஹகந்த அபிவிருத்தித் திட்டம் இதில் முக்கியத்துவம் பெறுகிறது. பல்வேறு வீதிகள் கார்பட் முறையில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன. எந்தவொரு அரச நிறுவனமும் வெளிநாடுகளுக்கோ, வெளிநாட்டு தனியார் நிறுவனங்களுக்கோ விற்பனை செய்யப்பட மாட்டாது என்றும் குறிப்பிட்டார்.

இலங்கையில் இடம்பெற்ற மிகப்பெரிய பொஸ்பேட் திட்டத்தை சீன அசராங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியத்தின் பின்னர் இலங்கைக்கு சார்பாக மாற்றிக் கொள்ள முடிந்துள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைகளை நாட்டுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தீர்க்கும் வாய்ப்பும் அரசாங்கத்திற்கு கிடைத்தது. இதற்கு உயர்ந்தபட்ச நடவடிக்கையை தாம் எடுத்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறினார்.

அரசாங்கம் முதற்தடவையாக மருந்துகளின் விலையை குறைந்துள்ளது. மாரடைப்பு நோயாளர்களுக்கு ஸ்ரேன் என்ற வால்வையும், கண் வில்லைகளையும் இலவசமாக வழங்குகிறது என்றும் ஜனாதிபதி கூறினார்.

இந்த நிகழ்வில் அமைச்சர்களான கயந்த கருணாதிலக்க, ராஜித சேனாரட்ன, அனுர பிரியதர்சன யாப்பா, லக்ஷ்மன் கிரியெல்ல, பைசர் முஸ்தபா உள்ளிட்ட பல பிரமுகர்களும் கலந்து கொண்டார்கள்.

Related posts

Germany, Sri Lanka discusses matters on civil-military coordination in Jaffna

புகையிரதம் தடம்புரண்டு விபத்து

காலநிலை