அரச மற்றும் அரசாங்கத்தின் உதவிகளைப் பெறும் அனைத்துப் பாடசாலைகளுக்குமான 2025 ஆம் ஆண்டுக்குரிய சீருடைகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான சான்றிதழ் பரிமாற்றம் 2025 ஆம் ஆண்டுக்கான 5,171 மில்லியன் ரூபா பெறுமதியான பாடசாலை சீருடைக்குத் தேவையான சீருடைத் தொகையையும், சீன அரசின் அன்பளிப்பாக வழங்கியதையும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் நிகழ்வு, ஜூலை 16 ஆம் திகதி பத்தரமுல்லை கல்வி அமைச்சில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவின் பங்கேற்பில் நடைபெற்றது.
அப்பொழுது 2025 ஆம் ஆண்டிற்குத் தேவையான மொத்த சீருடைத் தேவையும் வழங்கப்பட்டு முடிந்ததை அறிவிப்பதற்கான சான்றிதழ் பரிமாற்றம் பிரதமர் ஹரினி அமரசூரிய மற்றும் இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi Zhenhong ஆகியோருக்கிடையே இடம்பெற்றது.
ஏற்கனவே, 2026 ஆம் ஆண்டிற்குத் தேவையான பாடசாலை சீருடைத் தொகையையும் அன்பளிப்பாகப் பெற்றுத் தருமாறு சீனாவிடம் தமது கோரிக்கையை வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் ஊடாக மக்கள் சீனக் குடியரசின் இலங்கை சீனத் தூதரகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிகழ்வில் கருத்து தெரிவித்த பிரதமர்,
“இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையே இருந்து வருவது ஒத்துழைப்புடன் கூடிய நீண்டகால நட்பாகும்.
எமது நாட்டின் பாடசாலை மாணவர்களுக்குப் பெற்றுக்கொடுக்கப்பட்ட இந்த சீருடையும் அந்த நீண்டகால நட்பின் ஓர் அங்கமே ஆகும்.
2023 – 2024 ஆண்டுகளிலும் சீன அரசு எமது பாடசாலை சீருடைத் தேவையில் கணிசமான பகுதியைக் கொடுத்ததோடு, 2025 ஆம் ஆண்டின் முழு சீருடைத் தேவையையும் எமது நாட்டின் ஒட்டுமொத்தப் பாடசாலை மாணவர்களுக்கும் பெற்றுக் கொடுத்திருக்கிறது.
இலங்கைக்கு மிகவும் இக்கட்டான காலகட்டத்தில் இருந்தபோது, எமது மாணவர் சமுதாயத்தின் கல்வியை முன்னெடுப்பதற்காக சீன அரசிடமிருந்து கிடைக்கப் பெற்ற அந்த நன்கொடையானது எமக்குப் பெரும் மதிப்பு மிக்கதாகும்.
2026 ஆம் ஆண்டிற்காகவும் சீன அரசின் இந்த தொடர்ச்சியான உதவியை எமக்குப் பெற்றுத் தருமாறு ஏற்கனவே எமது அரசு சீன அரசாங்கத்திடம் கோரியிருக்கிறது.
இத்தருணத்தில் நான் எமது நாட்டின் பிள்ளைகளின் சார்பாகவும் பெற்றோர்களின் சார்பாகவும் சீன அரசுக்கும், மக்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்,” எனக் கூறினார்.
இந்த நிகழ்வில் கருத்து தெரிவித்த இலங்கைக்கான சீனத் தூதர் Qi Zhenhong,
“இலங்கைக்கு உதவி தேவைப்படும் சகல சந்தர்ப்பங்களிலும் சீனா உங்களது நம்பிக்கைக்குரிய சகோதரனாகவும் உதவியாளனாகவும் செயல்படும். இலங்கையின் குழந்தைகள் இந்த நாட்டின் எதிர்காலம் மட்டுமல்ல, சீன இலங்கை நட்பின் வாரிசுகளும் ஆவர்.
அவர்களின் சீருடையிலுள்ள ஒவ்வொரு தையலிலும், பழமையான நமது இரு நாட்டு நாகரிகங்களுக்கும் இடையிலான பரஸ்பர ஒத்துழைப்பின் கதையும் பின்னிப் பிணைந்திருக்கும். பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய கொடுக்கும் பங்களிப்பையும் மேற்கொள்ளும் அர்ப்பணிப்பையும் நான் மிகவும் பாராட்டுகிறேன்,” எனத் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் இலங்கை சீனத் தூதரக அதிகாரிகளும், கல்வி அமைச்சின் உத்தியோகத்தர்களும் பங்கேற்றனர்.