சீன அரசினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கான உபகரணங்கள் மற்றும் உலர் உணவு பொதிகள் பழைய மாவட்ட செயலகத்தில் நேற்று (06) வழங்கப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு உத்தியோக பூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டுள்ள சீனத் தூதுவர் கி சென்கொங் (Qi zhenhong) மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு “சீனாவின் சகோதர பாசம்” எனும் தொனிப் பொருளின் கீழ் உலர் உணவு பொதிகளை வழங்கி வைத்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பின் தலைவர் எஸ். மாமாங்க ராஜா தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் பங்குபற்றுதலுடன் மக்களுக்கான 100 உலர் உணவு பொதிகள் மற்றும் வாழ்வாதார மேம்பாட்டிற்கான உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 07 பிரதேச செயலக பிரிவுகளில் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி நிலையான வருமானத்தைப் பெற்றுக் கொள்வதற்கான உபகரணங்கள் இதன் போது வழங்கி வைக்கப்பட்டன.
சீன இலங்கை சகோதர பாசம் எனும் திட்டத்தின்கீழ் பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதன் போது கருத்து தெரிவித்த சீன தூதுவர் சீன அரசானது எப்போது இலங்கை அரசுடன் இணைந்து செயற்பட தயாராக உள்ளதுடன் கடந்த பொருளாதார தலம்பல் காலங்களில் இலங்கைக்கு நண்பனாக உதவியமையும் இதன் போது சுட்டிக்காட்டினார்.
இந் நிகழ்வில் சீனத் தூதுவரின் பாரியார் ஜின் குவான், தூதரக அதிகாரிகள், பிரதி திட்டமிடல் பணிப்பாளர்கள் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பினர் மற்றும் உயர் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பினரினால் கடந்த காலங்களில் களுவன்கோணி கிராமத்தில் உள்ள வயோதிபர்கள், அங்கவீனமானோர், ஏழைக் குடும்பங்களுக்கு பெறுமதியான உலர் உணவுப்பொதிகளை வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.