திருகோணமலை, மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெவனிபியவர வயலில் வாய்க்காலுக்குள் உயிரிழந்த நிலையில் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இச்சடலம் நேற்று (26) பி.ப. 4.30 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் மஹதிவுல்வெவ, தெவனிபியவர பகுதியைச் சேர்ந்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தரான கே.ஜீ. காமினி திலகரட்ண (57) எனவும் தெரியவந்துள்ளது.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது-தன்னுடைய வயலுக்கு பசளை வீசுவதற்காக சென்ற குறித்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் வயலில் வீழ்ந்து கிடந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாகவும் ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது.
மீட்கப்பட்ட சடலத்தை மொரவெவ பொலிஸார் திடீர் மரண விசாரணையின் அறிவுறுத்தலுக்கு அமைவாக, பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
குறித்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தரின் சடலத்தை பிரேத பரிசோதனையின் பின்னர் ஒப்படைக்க உள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.