தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தினால் (நிலட்) அரச ஊழியர்களுக்கான நடாத்தப்பட்ட 100 மணித்தியாலம் இரண்டாம் மொழி சிங்கள பயிற்சி நெறியை பூர்த்தி செய்த உத்தியோகத்தர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு சம்மாந்துறை பிரதேச சபையின் பிரதான கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இரண்டாம் மொழி வளவாளர் என்.எம். புவாட் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இதில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா, சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட், சம்மாந்துறை பிரதேச சபையின் பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் எஸ்.சுல்பா, இரண்டாம் மொழி பாட வளவாளர் ஆர்.பி.சந்துனி மஹேஷிகா விஜயந்தி ஆகியோர்கள் கெளரவ அதிதிகளாக கலந்து சிறப்பித்தார்கள்.
குறித்த நிகழ்வில் இரண்டாம் மொழி சிங்கள கற்கை நெறிகளை பூர்த்தி செய்த பயிலுனர்களால் பல்வேறுபட்ட கலை நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டு இடம் பெற்றது.
2020 ஆண்டு அரச கரும மொழி அமைச்சினால் வெளியிடப்பட்ட 18 ம் இலக்க சுற்றறிக்கைக்கு அமைவாக அரச உத்தியோகத்தர்களின் மொழி புலமையை விருத்தி செய்யும் முகமாக மேற்கொள்ளப்பட்ட பயிற்சி நெறி என்பது குறிப்பிடத்தக்கது.
-தில்சாத் பர்வீஸ்