திருகோணமலை, குச்சவெளியிலிருந்து கடலுக்குச் சென்ற இஜாஸ் என்ற நபர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்தினை கண்டிப்பதாகவும், துப்பாக்கிச்சூடு நடாத்திய நபர்கள் மீது சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென பொலிஸ் மா அதிபரிடம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
குச்சவெளி பிரதேசத்திலிருந்து திருகோணமலை கடலுக்குச் சென்ற இஜாஸ் என்ற மீனவர் மீது, கடற்படையினரால் இன்று (03) மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த றிஷாட் பதியுதீன்,
“மீனவத்தொழிலுக்காக கடலுக்குச் சென்ற அப்பாவி சமூகத்தினர் மீது, கடற்படை பாதுகாப்பு தரப்பினர் அத்துமீறு நடப்பதை நாம் வண்மையாக கண்டிக்கின்றோம்.
சந்தேக நபர்களாக சந்தேகிக்கப்பட்டால் உரிய முறைப்படி விசாரித்து நடவடிக்களை மேற்கொள்ளாமல் இவ்வாறு தான்தோன்றித்தனமான முறையில் அப்பாவிகள் மீது துப்பாகிச்சூடு மேற்கொள்ளும் இந்த செயற்பாட்டை நிறுத்த வேண்டும்.
இவ்வாறான செயற்பாட்டால் நாட்டின் பாதுகாப்பு துறை மேல் மக்கள் நம்பிக்கை இழந்து வருகின்றமைக்கு பெரும் உதாரணமாகி அமைந்துவிடும்.
மீனவ சமூகத்தை அச்சமூட்டும் இந்த செயற்பாடுகளை நிறுத்த வேண்டும், குறித்த சம்பவம் தொடர்பில் பாதுகாப்பு தரப்பு உடனடியாக விசாரணை மேற்கொள்ள வேண்டுமெனவும் இந்த சம்பவத்தால் மீனவ சமூகத்துக்கு மட்டுமல்ல, நாட்டின் சட்ட ஒழுங்குக்கும் சவாலாக அமைந்துள்ளது” எனவும் றிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்துள்ளார்.

