முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர், முன்னாள் வர்த்தக அமைச்சருமான நளின் பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் குறித்த இருவரும் குற்றவாளிகள் என மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது, சதொச ஊடாக 14,000 கேரம் பலகைகளை கொள்வனவு செய்ததன் மூலம் 53 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு குற்றம் சுமத்தியிருந்தது.
அதற்கமைய, குறித்த வழக்கு இன்று (29) மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதன்படி, சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர், முன்னாள் வர்த்தக அமைச்சருமான நளின் பெர்னாண்டோவுக்கு 25 வருட கடூழிய சிறைத்தண்டனையும், முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவுக்கு 20 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
தீர்ப்புக்கு முன்னர் நீதிமன்றத்தில் சாட்சியங்களை சமர்ப்பித்த இலஞ்ச விசாரணை ஆணைக்குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரி, இந்த பிரதிவாதிகள் தங்கள் பதவியின் அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்வதன் மூலம் தவறான செயலைச் செய்துள்ளதாக குறிப்பிட்டார்.
இந்தத் தவறு காரணமாக, அரசாங்கம் 53 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பொது வரி வருமானத்தை இழந்துள்ளதாகவும், இதனால் பொதுமக்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, இதுபோன்ற குற்றங்களைச் செய்யத் தயாராகி வருபவர்களுக்கு ஒரு பாடமாக அமையும் வகையிலும் ஊழல் எதிர்ப்பு ஆர்வலர்களை ஊக்குவிக்கும் வகையிலும் தீர்ப்பை வெளியிடுமாறு இலஞ்ச விசாரணை ஆணைக்குழு சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தைக் கோரினார்.
முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை பரிசீலித்த பின்னர், நீதிபதி மஹேன் வீரமன் தலைமையிலான மூவரடங்கிய மேல் நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்தது.