வகைப்படுத்தப்படாத

சட்டவிரோத கசிப்பு விற்பனையாளர்களினால் வாழ்வாதாரம் பாதிப்பு!

(UDHAYAM, COLOMBO) – சட்டவிரோத கசிப்பு விற்பனையாளர்களினால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கிளிநொச்சி பனை தென்னை வள தொழிலாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்திற்குட்பட்ட கரைச்சி மற்றும் கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுகளை உள்ளடக்கிய பிரதேசங்களில் முப்பது கள் விற்பனை நிலையங்கள் சட்டரீதியான அனுமதிகளோடு இயங்கிவருகின்றன.

இதில், 650 இற்கும் மேற்பட்ட பனை தென்னை வள தொழிலாளர்கள் தொழிலில் ஈடுபட்டுவருகின்றனர். குறித்த தொழிலாளர்கள் தாம் உற்பத்தி செய்யும் கள்ளினை குறித்த நிலையங்களில் வழங்கியே பிள்ளைகளின் படிப்புச் செலவு தொடக்கம் அன்றாட வாழ்க்கைச் செலவு வரை அனைத்திற்கும் இந்த தொழிலையே நம்பி வாழ்கின்றனர். இவர்களின் உழைப்பை நம்பியே அவர்களின் குடும்ப அங்கத்தவர்கள் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வாழ்ந்துவருகின்றனர்.

எனவே, தாம் நாற்பது அல்லது ஐம்பது அடி உயரமான மரங்களில் ஏறி மிகவும் அபாயகரமான நிலையில் தொழிலில் ஈடுபட்டுவரும் நிலையில், சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கும் சட்டவிரோதமான கசிப்பு விற்பனையாளர்களினால் தமது குடும்பம் வாழ்வாதாரத்தினால் பாதிக்கப்பட்டு வறுமைக்கு தள்ளப்படும் அபாயம் காணப்படுவதாகவும் கூறியுள்ளனர்.

இந்த விடயம் சம்பந்தமாக கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தினர் கருத்து தெரிவித்தபோது , கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது அதிகரித்துக் காணப்படும் கசிப்பு மற்றும் கஞ்சா விற்பனையால் பனை தென்னை வள தொழிலாளர்கள் என்றுமில்லாதவாறு பாரிய நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்துவருகின்றனர். அதுமட்டுமல்ல கள் விற்பனையில் வீழ்ச்சி நிலையும் காணப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்டவர்கள் இந்த விடயத்தில் கவனம் செலுத்தி தொழிலாளர்கள் பாதிக்கப்படாத வகையில் செயற்றிட்டங்களை முன்னெடுத்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனத் தெரிவித்தனர்

எஸ்.என்.நிபோஜன்

 

Related posts

ஆயுர்வேத வைத்தியசாலைகளில் மருந்து தடுப்பாட்டை தீர்க்க கணனி மென்பொருள்

இலங்கை, இந்திய பிரதமர்கள் புதுடில்லியில் சந்தித்தனர்

Heavy rains in Japan cause deadly landslides and floods