உள்நாடுவிசேட செய்திகள்

சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த வழக்கில் இலங்கை பொலிஸ் அதிகாரியை விடுதலை செய்ய ராமநாதபுரம் நீதிமன்றம் உத்தரவு

இந்தியா விற்குள் சட்டவிரோதமாக நுழைந்த இலங்கை போலீஸ் அதிகாரியை ராமநாதபுரம் முதன்மை மாவட்ட நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டார்.

இலங்கை கொழும்பு துறைமுக காவல் நிலையத்தில் பணிபுரிந்த காவலர் பிரதீப்குமார் பண்டார(35). இவர் கடந்த 5.9.2020-ம் தேதி நள்ளிரவு இலங்கை படகில் ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடி கடற்கரையில் வந்திறங்கிய போது, முறையான ஆவணங்களின்றி இந்தியாவிற்குள் நுழைந்ததாக மண்டபம் மரைன் போலீசார் கைது செய்து, சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

விசாரணையில் கொழும்பில் பறிமுதல் செய்து துறைமுகம் காவல் நிலையத்தில் வைக்கப் பட்ட 23 கிலோ ஹெராயின் போதைப்பொருள் மாயமானதில் அவரது சகோதரர் இலங்கை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் போதைப்பொருளை பிரதீப்குமார் பண்டார கடத்தி வந்து தன்னிடம் கொடுத்ததாக தெரிவித்தார்.

இந்நிலையில் இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி போலீசாருக்கு மாற்றப்பட்டது. ராமநாதபுரம் சி.பி.சி.ஐ.டி போலீசார் வழக்கு பதிவு செய்து, பிரதீப்குமார் பண்டாரவை விசாரணை செய்தனர்.

விசாரணையில் போதைப்பொருள் கடத்தலில் தனது சகோதரர் தன்னை மாட்டி விட்டதாகவும், அந்த கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க சட்டவிரோதமாக இந்தியா வந்ததாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து அவர் ராமநாதபுரம் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்ற உத்தரவுப்படி திருச்சியில் உள்ள இலங்கை அகதிகளுக்கான சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டார்.

அதன்பின் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்ததை பிரதீப்குமார் பண்டாரே ஒத்துக் கொண்டு, குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார்.

இந்த நிலையில் இவ் வழக்கில் நேற்று புதன்கிழமை (24) முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி ஏ.கே.மெஹ்பூப் அலிகான், பிரதீப்குமார் பண்டாரேவுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

பிரதீப் குமார் பண்டார சென்னை புழல் சிறையில் 3 மாதங்கள், அதனையடுத்து பிணையில் திருச்சி சிறப்பு முகாம் என 5 ஆண்டுகளுக்கு மேல் நீதிமன்ற கண்காணிப்பில் இருந்துள்ளார். அவர் நீதிமன்றம் விதித்த அபராதத் தொகையும் செலுத்தினார்.

விதிக்கப்பட்ட சிறை தண்டனை 2 ஆண்டுகளுக்கு மேல், அவர் சிறை மற்றும் சிறப்பு முகாமில் இருந்து உள்ளதால் அவரை நீதிபதி விடுதலை செய்தும், அவர் காவல்துறை மற்றும் குடியேற்ற நடைமுறைகளை முடித்துக் கொண்டு சொந்த நாட்டிற்கு செல்லலாம் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

-மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்

Related posts

நாட்டில் மத, கலாசார மறுமலர்ச்சியை உருவாக்குவதற்கு வாய்ப்பு – ஜனாதிபதி அநுர

editor

இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்களை புகாரளிப்பதற்கு புதிய வாட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்

editor

கர்ப்பிணிப் பெண்களுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டம் புதனன்று