கொழும்பு – கண்டி பிரதான வீதியின் மாவனெல்லை, பல்பாத பகுதியில் இன்று (09) மாலை 3.30 மணியளவில் இரண்டு பேருந்துகள் மற்றும் லொறியும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில், லொறியின் உதவியாளர் உயிரிழந்தார்.
இந்த விபத்தில் லொறியில் பயணித்த மற்றொரு நபரும், இரண்டு பேருந்துகளிலும் பயணித்த சில பயணிகளும் காயமடைந்து கேகாலை மற்றும் மாவனெல்லை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கண்டியிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த லொரியொன்றின் பிரேக் செயலிழந்ததன் காரணமாக, உதுவன்கந்தை இறக்கத்தில் பயணித்துக்கொண்டிருந்த போது, முன்னால் சென்றுகொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்தின் பின்பக்கத்தில் மோதியுள்ளது.
லொறி மோதிய வேகத்தில் அந்த இ.போ.ச பேருந்து, தனக்கு முன்னால் சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்துடன் மோதி, பின்னர் ஒரு மதகில் மோதி நின்றது.
அதேநேரம், முன்னால் சென்ற தனியார் பேருந்து விபத்தின் வேகத்தில் தள்ளப்பட்டு அருகில் இருந்த வயலுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் பூண்டுலோயாவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பேருந்திலிருந்த பயணிகளே இவ்வாறு காயமடைந்துள்ளனர்.
அந்தப் பேருந்தின் சாரதி இந்தச் சம்பவத்தை பின்வருமாறு விவரித்தார்,
“நான் பார்த்துக்கொண்டிருக்கும்போதே ‘தடார்’ எனப் பலத்த சத்தத்துடன் ஏதோ மோதியது. அது ஒரு ஜெட் விமானம் செல்வது போல வேகமாகக் கடந்து சென்றது. பேருந்துக்குள் சுமார் 55 – 60 பயணிகள் இருந்தனர்.
அவர்களில் மூன்று அல்லது நான்கு பேருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது. முன்னால் ஒரு கேகாலை – மாவனெல்லை பேருந்து சென்றுகொண்டிருந்தது, அதற்காக நான் எனது பேருந்தின் வேகத்தைக் குறைத்தேன்.
அந்தச் சமயத்தில் பின்னால் ஏதோ பலமாக மோதியது. ஜெட் விமானம் தள்ளிக்கொண்டு செல்வது போல எல்லாவற்றையும் அப்படியே தள்ளிக்கொண்டு சென்றது. என்ன நடந்தது என்று என்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை.” என்றார்.
