கொலம்பிய ஜனாதிபதி வேட்பாளர் செனட்டர் மிகுவல் யூரிப் டர்பே மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொகோட்டாவில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் உரையாற்றிக் கொண்டிருந்த இவர் மீது மூன்று துப்பாக்கி பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு அவற்றில் இரண்டு அவரது தலையை இலக்கு வைத்திருப்பதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இத்துப்பாக்கி பிரயோகத்தினால் கடும் காயங்களுக்கு உள்ளாகியுள்ள ஜனாதிபதி வேட்பாளர் யூரிப் ட்ர்பே ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இத்துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டார் என்ற சந்தேகத்தின் பேரில் 15 வயது மதிக்கத்தக்க சிறுவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் கைது செய்யப்படும் போது க்ளாக் பிஸ்டலை வைத்திருந்ததாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
தென் அமெரிக்க நாட்டின் மிகப்பெரிய எதிர்க்கட்சியான மத்திய வலதுசாரி சென்ட்ரோ டெமாக்ராட்டிகோ அல்லது ஜனநாயக மையத்தைச் சேர்ந்த 39 வயதான இவர், அடுத்த ஆண்டு தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்தார்.
இவர் மீது துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்ற சமயம் குறித்த காணொளியொன்றும் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
அந்த காணொளியில் செனட்டர் ஒரு கூட்டத்தினரிடம் உரை நிகழ்த்துவதும் அதற்கு முன்பு பலத்த சத்தங்கள் கேட்பதும் பதிவாகியுள்ளது.
அத்தோடு அவரைச் சுற்றியுள்ளவர்கள் தப்பி ஓடும்போது அவர் தரையில் படுத்துக் கிடப்பதும் பின்னர் பொலிஸாரும் பொதுமக்களும் அவரை அம்புலன்ஸில் ஏற்றியமையும் பதிவாகியுள்ளது.
-சி.என்.என்