அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

கொரியக் குடியரசின் தேசிய சட்டமன்றத்தின் பிரதி சபாநாயகர் இலங்கை சபாநாயகரைச் சந்தித்தார்

கொரியக் குடியரசின் தேசிய சட்டமன்றத்தின் பிரதி சபாநாயகர் கௌரவ லீ ஹேக் யங், இலங்கை பாராளுமன்றத்தின் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களை அண்மையில் (03) பாராளுமன்ற வளாகத்தில் சந்தித்தார்.

கொரியக் குடியரசின் தேசிய சட்டமன்ற உறுப்பினர்களான கௌரவ பாக் கிவாங், கௌரவ சாங் ஜேபாங் மற்றும் கௌரவ ஜங் ஹேக்யுங், தேசிய சட்டமன்றச் செயலகத்தின் ஆசிய-பசிபிக் அலுவல்கள் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் செல்வி லீ ஜெயங் மற்றும் கொரியக் குடியரசின் இலங்கைக்கான தூதுவர் கௌரவ மியோன் லீ ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.

அத்துடன், பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர அவர்களும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டார்.

இக்கலந்துரையாடலின் போது, கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்கள், பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் ஊடாக இலங்கைக்கு வழங்கப்பட்ட உதவிகளுக்காகவும், அண்மையில் தித்வா சூறாவளியினால் ஏற்பட்ட அனர்த்தத்தின் போது வழங்கப்பட்ட ஆதரவிற்காகவும் கொரிய அரசாங்கத்திற்குத் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.

கல்வி, போக்குவரத்து, கிராமிய அபிவிருத்தி மற்றும் நீர் வள அபிவிருத்தி ஆகிய துறைகளில், குறிப்பாக கொரிய சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனம் (KOICA) ஊடாக கொரியக் குடியரசின் உதவியுடன் செயல்படுத்தப்பட்ட முக்கிய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் கௌரவ சபாநாயகர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இலங்கையின் அரச துறைக்காக வழங்கப்பட்ட திறன் விருத்தித் திட்டங்களுக்காகவும் அவர் தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

இலங்கையின் பொருளாதார நிலை தற்போது ஸ்திரமடைந்துள்ளதாகக் குறிப்பிட்ட கௌரவ சபாநாயகர், இலங்கையில் உள்ள முதலீட்டு வாய்ப்புகளை ஆராயுமாறு கொரிய முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

அத்துடன், எதிர்காலத்தில் கொரியக் குடியரசில் இலங்கைத் தொழிலாளர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

இங்கு கருத்துத் தெரிவித்த கொரியக் குடியரசின் தேசிய சட்டமன்றத்தின் பிரதி சபாநாயகர் கௌரவ லீ ஹேக் யங், தனக்கு விடுக்கப்பட்ட அழைப்பிற்காக கௌரவ சபாநாயகருக்குத் தனது நன்றியைத் தெரிவித்ததுடன், இந்த விஜயம் இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்று குறிப்பிட்டார்.

இலங்கை – கொரியா இராஜதந்திர உறவுகள் அடுத்த ஆண்டில் 50 ஆண்டுகளை நிறைவு செய்வதைச் சுட்டிக்காட்டிய அவர், இரு நாடுகளினதும் பரஸ்பர நன்மை மற்றும் அபிவிருத்திக்காக மேலும் பரந்த அளவிலான துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்த முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

கொரிய சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கும் நோக்கில் விசா வசதிகளை வழங்குதல், வலுசக்தி மற்றும் நெடுஞ்சாலைகள் போன்ற முக்கிய உட்கட்டமைப்புத் திட்டங்களில் கொரிய நிறுவனங்கள் பங்கேற்பதற்கு அதிக வாய்ப்புகளை வழங்குதல் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான பாராளுமன்ற மட்டத்திலான மற்றும் கலாசார ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துதல் தொடர்பான விடயங்கள் குறித்தும் இக்கலந்துரையாடல்களில் கவனம் செலுத்தப்பட்டது.

இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து, தூதுக்குழுவினர் பாராளுமன்றத்தை பார்வையிட்டதுடன், பாராளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள ஜய ஸ்ரீ மஹாபோதிக்கு மலர் தூவி வணக்கம் செலுத்தினர்.

அத்துடன் பிரமுகர்களுக்கான கலரியிலிருந்து பாராளுமன்ற அமர்வையும் பார்வையிட்டனர்.

Related posts

ஹம்தியின் ஜனாஸா இன்னும் அடக்கம் செய்யப்படவில்லை! நடப்பது என்ன?

நுவரெலியாவில் தபால் நிலைய விற்பனைக்கு எதிராக பாரிய போராட்டம்!

தடை செய்யப்பட்ட அமைப்புகள், தனிநபர்கள் தொடர்பில் புதிய வர்த்தமானி வெளியானது

editor