மறைந்த எனது தந்தை அமரர் சுந்தரலிங்கம் மற்றும் மறைந்த தோழர் பாலகிருஷ்ணன் ஆகியோர் மக்கள் விடுதலை முன்னணிகாக செய்த அர்ப்பணிப்பு தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்கு காரணமாகும் என்று பெருந்தோட்ட சமூக அபிவிருத்தி மற்றும் தோட்டட உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.
காவத்தை ஓபாத்த திம்புல்வல பிரதேசத்தில் நேற்றையதினம் (09) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
காவத்தை ஓபாத்த பிரதேசம் எனது சொந்த பூமி ஆகும். இந்த பூமியில் வாழ்ந்த எனது தந்தை மறைந்த அமரர் சுந்தரலிங்கம் மற்றும் அவருடன் தோழமையாக செயல்பட்ட மறைந்து அமரர் பாலகிருஷ்ணன் ஆகியோர் மக்கள் விடுதலை முன்னணிக்காக ஆரம்ப காலத்தில் இருந்து உழைத்தவர்கள்.
இவர்களின் பின்னணியிலேயே நான் அரசியலில் ஈடுபட்டேன். எனது இந்த வெற்றிக்கு இவர்களும் ஒரு காரண கர்த்தாக்களாக விளங்குகின்றார்கள்.
எனவே இந்த நேரத்தில் எமது கட்சிக்காக ஆரம்ப காலத்திலிருந்து மிகவும் அர்ப்பணிப்புடன் செயல்பட்ட மறைந்த எனது தந்தை அமரர் சுந்தரலிங்கம் மற்றும் மறைந்த தோழர் அமரர் பாலகிருஷ்ணன் ஆகியோர் இன்று எமது மத்தியில் இல்லாவிட்டாலும்கூட அவர்களை ஞாபகப்படுத்தி அவர்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.
இன்று மாற்றுக் கட்சிகளை சேர்ந்த ஒரு சில அரசியல்வாதிகள் எனக்கு எதிராக காவத்தை ஓபாத்த பிரதேசத்தில் பொய்யான பிரசாரங்களை செய்து வருகின்றார்கள்.
இதை கேட்டு மக்கள் ஒரு போதும் ஏமாற மாட்டார்கள் என்பதை எனக்கு உறுதியாக கூற முடியும்.
எனக்கு ஆதரவளித்த மக்களுக்கு எதிராக நான் ஒரு போதும் துரோகம் செய்ய மாட்டேன். மக்கள் என்னை முழுமையாக நம்பியுள்ளார்கள்.
எமது அரசாங்கம் ஊழல் அற்ற அரசாங்கம். அதேபோல் நானும் என்னுடன் கடமை புரியும் அனைவரும் ஊழல் அற்றவர்கள். நாங்கள் ஊழல்வாதிகளுக்கு எதிராகவே செயல்பட்டு வருகின்றோம்.
காவத்தை ஓபாத்த பிரதேசத்திற்கு பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. விரைவில் அதற்கான பணிகள் ஆரம்பிக்கப்படும்.
மேற்படி அபிவிருத்தி திட்டங்கள் அனைத்தும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் மூலமாகவே முன்னெடுக்கப்படும்.
குறுகிய காலத்தில் எமது அரசாங்கம் நாட்டில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது என்றும் பெருந்தோட்ட சமூக அபிவிருத்தி மற்றும் தோட்டட உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கொடக்கவெல பிரதேச சபை உறுப்பினர் விக்ரமசிங்கம் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களான முரளி மற்றும் ராஜ்குமார், ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
-சிவா ஸ்ரீதரராவ் இரத்தினபுரி நிருபர்