கொடூரமாக கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட குடும்பப் பெண்ணின் படுகொலை தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் சகோதரிகளான இரட்டையர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட விஷ்ணு கோயில் வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் தனித்திருந்த 38 வயது மதிக்கத்தக்க இரண்டு பிள்ளைகளின் தாயான மனோதர்ஷன் விதுஷா என்ற குடும்பப் பெண் கடந்த மே மாதம் வெள்ளிக்கிழமை (30) படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
குறித்த பெண்ணின் கழுத்துப் பகுதியில் காயங்கள் ஏற்படக் கூடிய வகையில் வெட்டப்பட்டு தாக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டிருந்தது ஆரம்பக் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதேவேளை, பொதுமக்களின் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்ட குறித்த சம்பவம் தொடர்பில் பல தரப்பினரும் விசாரணைகளை மேற்கொண்டிருந்த நிலையில் 24 நாட்களின் பின்னர் அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் நேரடிக் கண்காணிப்பில் இயங்கும் D.C.D.B என அழைக்கப்படும் அம்பாறை மாவட்ட குற்றப் புலனாய்வு பிரிவில் இணைக்கப்பட்ட உப பரிசோதகர் ஏ.எல்.எம். அஸீம் தலைமையிலான அணி குறித்த படுகொலை தொடர்பில் 34 வயதுடைய இரட்டையர்களான சகோதரிகளைக் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களும் கல்முனை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இப்படுகொலை இடம்பெற்றபோது மரணமடைந்த குடும்ப பெண்ணின் கணவர் வெளிநாடு ஒன்றில் தொழில் நிமித்தம் இருந்ததுள்ளார்.
சம்பவம் இடம்பெற்ற வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரிவி கெமராவின் காணொளிகளை சேமிக்கும் கருவி (DVR) கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களால் எடுத்துச் செல்லப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
-பாறுக் ஷிஹான்