எல்பிட்டிய பகுதியில் இன்று (17) நடைபெறவிருந்த புத்தாண்டு விழாவிற்காக கிரீஸ் மரத்தை தயார் செய்யும் போது, அதிலிருந்து தவறி விழுந்து பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்தார்.
பிடிகல, அமுகொட சிறிவிஜயாராம விகாரைக்கு அருகிலுள்ள விளையாட்டு மைதானத்தில் புத்தாண்டு விழாவை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுக் கொண்டிருந்த போது இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் நிகழ்ந்தது.
40 அடி உயரமான கிரீஸ் மரத்திலிருந்து தவறி விழுந்த பாடசாலை மாணவன் எல்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பிடிகல பொலிஸார் தெரிவித்தனர்.
இறந்தவர் 16 வயதுடைய பாடசாலை மாணவர் என்பதுடன், இம்முறை க.பொ.த. பரீட்சைக்கு தோற்றி பெறுபேறுகளுக்காக காத்திருந்தவர் என்று கூறப்படுகிறது.
எல்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதுடன், பிடிகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.