மஸ்கெலிய பொலிஸ்பிரிவிற்குட்பட்ட மஸ்கெலியா புரவுன்லோ தோட்டப் பகுதியை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் நேற்று (8) சனிக்கிழமை மாலை 05.30 மணியளவில் மவுசாகலை நீர்த்தேக்கத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மஸ்கெலிய பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சடலம் சுழியோடிகளின் உதவியோடு மீட்கப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். சடலமாக மீட்கப்பட்ட நபர் மஸ்கெலிய புரவுன்லோ தோட்டத்தை சேர்ந்த 55 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான வேலு மருதமுத்து என தெரியவந்துள்ளது.
குறித்த குடும்பஸ்தர் கடந்த மூன்று நாட்களாக காணாமல் போயிருந்த நிலையில், இவரின் உறவினர்கள் மஸ்கெலிய பொலிஸ் நிலையத்தில் முறைபாடு ஒன்றையும் பதிவு செய்திருந்தனர்.
சடலம் சட்டவைத்திய அதிகாரியின் பிரேத பரீசோதனைக்காக டிக்கோய கிழங்கன் ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மஸ்கெலிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
-சதீஸ்குமார்