கண்டி, தென்னேகும்புர பாலம் அருகே காணாமல் போனதாகக் கூறப்படும் இரண்டு மாணவர்களில் ஒருவரின் சடலம் மகாவலி ஆற்றில் மிதந்து கொண்டிருந்த போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மகாவலி ஆற்றின் ஹாரகம பகுதியில் இன்று (10) காலை மிதந்து கொண்டிருந்த மாணவனின் சடலம் அவதானிக்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்டுள்ளர் ரவிச்சந்திரன் ஜெகதீஸ் என்ற 14 வயது பாடசாலை மாணவன் என தெரியவந்துள்ளது.
நேற்று (09) இரண்டு பாடசாலை மாணவர்கள் காணாமல் போனதாக முறைப்பாடு அளிக்கப்பட்டது.
இவ்வாறு காணாமல் போன மாணவர்கள் கண்டி நகரில் இரு பாடாலைகளில் கல்வி கற்று வந்த தென்னேகும்புர பகுதியைச் 09 மற்றும் 08ஆம் தரங்களை சேர்ந்த 14 வயதான ரவிச்சந்திரன் ஜெகதீஷ் மற்றும் எம். மிலான் ஆகியோர் ஆகும்.
குறித்த இரு மாணவர்களும் நேற்று மாலை வளர்ப்பு மீன்களை கொள்வனவு செய்வதாக கூறி வீடுகளில் இருந்து திகன பகுதிக்கு சென்றுள்ளனர்.
இதற்கிடையில், குறித்த இருவரும் நேற்று (09) மாலை மகாவலி ஆற்றில் இறங்கி பாறைக் கரையில் இருந்ததாக அந்தப் பகுதியைச் சேர்ந்த மீனவர் ஒருவர் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.
மீனவர் இரு மாணவர்களையும் ஆற்றில் இறங்க வேண்டாம் என்று எச்சரித்த போதிலும், அவர்கள் மீனவரிடம் நீந்த முடியும் என்று கூறினர்.
இருப்பினும், மழையால் ஆற்றில் நீர்மட்டம் உயர்ந்துள்ளதாகவும், இரண்டு மாணவர்களும் பாறைக் கரையில் இல்லாததால், அவர்கள் ஆற்றைக் கடந்திருக்க வேண்டும் என்று தான் நினைத்ததாகவும் மீனவர் மேலும் பொலிசாரிடம் கூறினார்.
மேலும் பலர் இரண்டு மாணவர்களும் மகாவலி ஆற்றில் இறங்குவதைக் கண்டதாகவும் பொலிசாரிடம் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், காணாமல் போன ஜெகதீஷ் என்ற மாணவரின் தாய், தனது மகனுக்கு நீச்சல் தெரியாது என்றும், தனது மகன் ஒருபோதும் மகாவலி ஆற்றில் நீந்தச் செல்ல மாட்டார் என்றும் கூறியுள்ளார்.
இதற்கிடையில், காணாமல் போன இரண்டு மாணவர்களின் நண்பரின் தந்தை, இரண்டு மாணவர்களும் தனது மகனை மகாவலி ஆற்றில் நீந்த அழைத்ததாகவும், ஆனால் அவர் அவர்களுடன் செல்லவில்லை என்றும் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.
கண்டி தலைமையக பொலிஸார் மற்றும் பலகொல்ல பொலிஸாரும் இணைந்து காணாமல் போன மாணவர்களைத் தேடுவதற்காக கூட்டு நடவடிக்கையை மேற்கொண்டதுடன், மகாவலி ஆற்றில் தேடுவதற்காக கடற்படையின் சுழியோடிகளும் பயன்படுத்தப்பட்டிருந்தனர்.