களனி கங்கை ஆற்றுப்படுகையின் தாழ்நிலப் பகுதிகளுக்கு பாரிய வெள்ள நிலைமை ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அடுத்த 48 மணித்தியாலங்களுக்குள் எஹெலியகொட, நோர்வூட், யட்டியாந்தோட்டை, கலிகமுவ, ருவன்வெல்ல, புலத்கொஹுபிட்டிய, தெஹியோவிட்ட, சீதாவக்க, தொம்பே, பாதுக்கை, ஹோமாகம, கடுவலை, பியகம, கொலன்னாவ, களனி, வத்தளை மற்றும் கொழும்பு பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு உட்பட்ட களனி கங்கை ஆற்றுப்படுகையின் தாழ்நிலப் பகுதிகளில் இந்த பாரிய வெள்ள நிலைமை ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
களனி கங்கை ஆற்றுப்படுகையின் நீரேந்துப் பகுதிகளில் பல இடங்களில் தற்போது அதிக மழை பெய்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த மழை நிலைமை, களனி கங்கையின் மேல் ஆற்றுப்படுகையில் அமைந்துள்ள நீர்த்தேக்கங்களிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு மற்றும் நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் களனி கங்கை ஆற்றுப்படுகைக்குள் பராமரிக்கப்படும் ஆற்று நீர் அளவீடுகளின் நீர் மட்டங்களை பகுப்பாய்வு செய்ததன் அடிப்படையில் இந்த எச்சரிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த நிலைமையால் உயிர்கள் மற்றும் உடைமைகளைப் பாதுகாத்துக் கொள்ள மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அப்பிரதேசங்களில் வசிக்கும் பொதுமக்களிடமும், அப்பிரதேசங்கள் ஊடாக பயணிக்கும் சாரதிகள் மற்றும் பயணிகளிடமும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அனர்த்த முகாமைத்துவப் பிரிவுகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
